2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுனாமி ஏற்பட்டு 06 வருடங்க ள் ஆகின்ற நிலையிலும் தகரக் கொட்டில்களில் வசிக்கும் மக்கள்

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 6 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையிலும் தாம் இன்னும் கொட்டில்களிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்,  தமக்கான நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதில் உரிய தரப்பினர் யாரும் இதுவரை அக்கறை காண்பிக்கவில்லை எனவும் சுனாமியால் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் பகுதியில் வசித்து வரும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது சாய்ந்தமருதுப் பிரதேச கடற்கரையிலிருந்து 65 மீற்றர் பகுதிக்குள் குடியிருந்தவர்களில் பாதிக்கப்பட்ட 406 குடும்பத்தவர்கள் மேற்படி ஜும் ஆ பள்ளிவாயில்  பகுதியில் இவ்வாறு தற்காலிகத் தகரக் கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றனர்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் 6 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையிலும் இதுவரை இவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்களை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் உரிய தரப்பினர் யாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை,  மேற்படி மக்கள் குடியிருக்கும்  கொட்டில்கள் அமைந்துள்ள பிரதேச சுற்றுப்புறம் மற்றும் வடிகான்கள் போன்றவை முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாகவும்,  இதனால் தாம் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த மக்கள்  புகார் கூறுகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீமிடம் வினவியபோது,

சாய்ந்தமருது கரவாகுவட்டைப் பகுதியில் இவர்களைக் குடியேற்றுவதற்கான சிறிதளவு காணிகள் உள்ளதாகவும்,  அந்தக் காணிகளை மண்ணிட்டு நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். அதேவேளை,  மேற்படி 406 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்கு அந்தக் காணிகள் போதாது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும்,  சுனாமி அனர்த்தத்தினை நினைவு கூறும் 6 ஆவது வருடம் நெருங்கிவரும் இந்த வேளையிலாவது,  நிர்க்கதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமது நிலை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்த மக்களின் வேண்டுகோளாகும்.


                                   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .