2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஸ்ஜிதுக்களின் சொத்துக்களை அரசியலுக்காக துஷ்பிரயாகம் செய்வது வெறுக்கத்தக்க செயலாகும: ஜம்இய்யத்துல்

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மஸ்ஜிதுக்களின் சொத்துக்களை அரசியலுக்காக துஷ்பிரயாகம் செய்வது இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்காத வெறுக்கத்தக்க செயலாகும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்த விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின்  தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) மற்றும் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா (நளீமி) ஆகியோர் கையொப்பமிட்டு மேற்படி அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,

"தேர்தலில் வாக்குக் கேட்பது, வாக்களிப்பது, பிரசாரத்தில் ஈடுபடுவது போன்றவை ஒவ்வொருவரினதும் ஜனநாயக மனித உரிமையாகும்.

அவற்றுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பது ஹராமாகும் என்பதை சகல கட்சிப் பொறுப்புதாரிகளும் கவனத்தில் கொண்டு அமைதி நிறைந்த சுமுகமான தேர்தலாக உள்ளூராட்சி தேர்தலை நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கவும்.

எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள முஸ்லிம் வேட்பாளர்களும், கட்சித் தலைமைகளும், முக்கிய பொறுப்புதாரிகளும் பரஸ்பரம் தூஷித்தல், தனிமனித கண்ணியத்துக்கும், கௌரவத்துக்கும் அவதூறு ஏற்படுத்துதல் போன்ற  இஸ்லாம் தடை செய்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

மேலும் ஜனநாயகத் தன்மையோடும், நாகரீக மனப்பாங்கோடும், நீதி – நியாய, ஒழுக்க விழுமியங்களை இயன்றவரை கடைப்பிடித்தும் தேர்தல் காலங்களில் நடக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் குறுகிய, சுயலாப அரசியல் நலனுக்காக மோதிக்கொள்வது வெட்கக் கேடானது.

மாற்று மத சமூகங்களுக்கு மத்தியில் எம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்கின்றமையானது கண்டிக்கத்தக்க ஒரு செயற்பாடாகும்.

இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் விழிப்புடன் செயற்பட்டு உரிய வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை அந்தந்த இடங்களில் வழங்க முன்வரவேண்டும்.

பொதுச் சொத்துக்களை, அரச சொத்துக்களை தமது சுயநல அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதும், மஸ்ஜிதுக்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதும் இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்காத, வெறுக்கத்தக்க விடயங்களாகும்.

இது பற்றிய இஸ்லாமிய விழிப்புணர்வை எதிர்வரும் குத்பாப் பிரசங்கங்களில் மேற்கொள்ளுங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .