2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசின் ஊதுகுழலாக செயல்படும் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப்பரவலை பலவீனமாக்கக்கூடாது: இரா.துரைரெட்ணம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

அரசின் ஊது குழலாக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப்பங்கீட்டை பலவீனமாக்கக்கூடாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இலங்கையிலும் வெளி நாடுகளிலும் சமீபகாலமாக சில தமிழர்கள் அரசுடன் சேர்ந்து கொண்டு அரசின் ஊது குழலாக செயல்படத் தொடங்கியுள்ளனர். இது மொத்த தமிழர்களின் அடையாளத்தையும் அரசியல் உரிமைகளையும்  பலவீனப்படுத்தும் செயலாகும்.

இவர்கள் தேசியக் கட்சியில் சேர்ந்து சில பதவிகளை தம்பெயரோடு ஒட்டிக்கொண்டு அரசியல் பிரமுகர்கள் என்ற தோரணையில் சிங்கள தேசியவாதத்தின் அபிலாசைகளை தமிழரின் அபிப்பிராயங்கள் எனத் தெரிவிக்கின்றனர். இவை தமிழர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களாகும்.

மாகாணசபைக்கு பொலிஸ், காணி, நிதி, அதிகாரங்கள் தேவையில்லை என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். கடந்த 30 வருடங்கள் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடி அனைத்தையும் இழந்து நின்றனர்.

இன்று இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் எமது பிரச்சினைகளை கரிசனையுடன் திரும்பிப்பார்க்க முன்வந்திருக்கும் வேளையில் இவர்கள் இவ்வாறு அபத்தமான கருத்துக்களை கூறுவது எமது மக்களின் தியாகங்களும் உரிமைகளும் வேட்டுவைக்கும் செயலாகும்.

வடகிழக்கு மாகாணங்களில் அரசு இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்துவதும் காணிகளை மத்திய அரசுக்கு மாற்றுவதும் எல்லைப் புறங்களில் திட்டமிட்ட குடியேற்றத்தை நடத்துவதும் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கிய அதிகாரத்தை மீளப் பெறுவது வடகிழக்கைப் பிரித்து தமிழர்களைப் பலவீனப்படுத்தவும் தழர்களின் அடையாளங்களை அழிக்க தமிழர்களையே தூண்டிவிடுவதும் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

தயவுகூர்ந்து ஊது குழலாக செயல்படுபவர்கள் தமிழர்களுக்கான அதிகாரப்பரவல்கலை மத்திய அரசு வழங்க முன்னின்று உழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X