2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசாங்கத்தை விட்டு மு.கா விலகாது; அதற்கான ஆணையை மக்கள் தரவில்லை: ஹக்கீம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து எமது கட்சி முக்கியஸ்தர்கள் இந்த மேடையில் கூறிய சில விடயங்களைக் கேட்கும்போது, அவர் நம்பிக்கைக்குரியவர் என்கிற மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அந்தப் பதவியில் இருக்க முடியும் என்பதனை நான் அறுதியும் உறுதியுமாகக் கூறுகின்றேன் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என்றும், அதற்கான ஆணையை மக்கள் தமக்குத் தரவில்லை என்றும் தெரிவித்த ஹக்கீம், தமது சுய கௌரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்...

முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது. இதற்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்தில் ஓர் அக்கினிப் பரீட்சை நடைபெறப்போகின்றது.

இந்தப் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கமைய முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப்பேரும் - குறித்த அக்கினிப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கிறோம். நாடாளுமன்றத்துக்கு வரும் என்ன சட்டமூலமாக இருந்தாலும், கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கமையவே அவற்றினை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

சில பத்திரிகைகள் - முஸ்லிம் காங்கிரஸை அவர்கள் விரும்பிய திசைகளிலெல்லாம் இழுத்துக்கொண்டு போகலாம் என்று நினைக்கின்றன. அவர்களுடைய தேவைகளுக்கமைய எமது கட்சியை நடத்த முடியாது. கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாது. இந்த பேராளர் மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும்.

முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். மேல்மட்ட அமைச்சர்கள் உத்தரவாதங்களைத் தந்திருக்கிறார்கள். அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவர்தான் அடுத்துவரும் சில நாட்களில் எங்கள் வாக்குகளை நாடாளுமன்றத்தில் எதிர்பார்த்துள்ளார். எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு – நாம் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது முக்கியமானதாகும்.

நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்றவர்கள். இதனால்தான் பழிவாங்கப்படுகிறோம். அரசாங்கத்தோடு இரண்டரக் கலந்து, சங்கமம் ஆகாத கட்சியினர் என்ற காரணத்தினால் மு.காங்கிரஸ் ஓரக் கண்ணால் பார்க்கப்படுகிறது.

கிழக்குமாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இந்த மேடையில் எமது கட்சியியைச் சேர்ந்தோர் கூறியதைக் கேட்கும் பொழுது,  முதலமைச்சரைப்பற்றிய மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது. மு.கா.வின் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பது வேறு விடயம். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சர் பதவியில் இருக்க முடியும் என்பதை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன்.

நாங்கள் அரசாங்கத்தை விட்டு போகமாட்டோம், அதற்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் வழங்கவில்லை. ஆனால் எங்களது சுய கௌரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றார்.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத், செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி, பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், கிழக்கு மாகாண அமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • minaheem Sunday, 30 December 2012 06:15 PM

    ஹஹஹஹா.....கிழக்கில் கொடுத்த ஆணை என்னவாச்சு?

    Reply : 0       0

    DeeN Sunday, 30 December 2012 06:51 PM

    மக்கள் ஆணை தராவிட்டாலும் ஆனைக்குப்போட்ட வாக்குகளினால்தான் பாராளுமன்றம் சென்றதை மறக்க வேண்டாம் தலைவா! அரசுடன் சேர்வதற்கு எங்களுக்கிட்ட ஆணை கேட்டீங்களா தலைவா?
    பின்ன எப்புடீங்க பிரிவதற்கு ஆண தரல்ல பூன தரல்ல என்பீங்க.
    ஏதோ தலைவா எங்கேயோ இடிக்கிறது.

    Reply : 0       0

    Kumar Sunday, 30 December 2012 11:35 PM

    நல்ல அரசியல் வாதி சார் நீங்க

    Reply : 0       0

    K.Balendran Monday, 31 December 2012 12:17 AM

    தலைவரே, கிழக்கு மாகாண சபை தேர்தல் நேரத்தில் அதனை சொல்லியிருக்கலாமே. பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை.

    Reply : 0       0

    Mirajam Monday, 31 December 2012 04:39 AM

    மக்கள் என்று ஹகீம் கருதுவது யாரை...?
    முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களையா அல்லது அந்த வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்ற சுயநலவாதிகளையா....

    Reply : 0       0

    Kanavaan Monday, 31 December 2012 05:48 AM

    ஹக்கீம் சார், அரசை விட்டு விலகும் வாக்குரிமையை மக்கள் உங்களுக்குத் தரவில்லை என்றால், அரசுடன் சேரும் வாக்குரிமையை அவர்கள் தந்தார்களா என்ன? உங்களுக்கோ அல்லது உங்களது கட்சிக்கோ சுயகௌர‌வம் தனித்துவம் இருக்கா சார்? ஏன் சார் கொன்றடிக்ட் பண்ணுறீங்க? ஓரக் கண்ணால் உங்களை அரசாங்கம் பார்க்கிறது எண்டால் ஏன் சார் அந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கீங்க? போங்க சார், போங்க புலுடா விடாம.

    Reply : 0       0

    Mulla Monday, 31 December 2012 06:04 AM

    எல்லாம் முடிஞ்சி எண்டு
    சனம் நெனச்சிக்கி இருக்கு
    தம்பி இப்போ அக்கினிப் பரீட்சை
    எழுதப்போறாராமே ...!
    "என்ன கொடும சரவணன்...!"

    Reply : 0       0

    AJ Monday, 31 December 2012 06:13 AM

    ஹஹஹஹஹஹஹஹஹ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .