2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிகார மூர்க்கத்துடன் செயற்பாடுகின்றார்'

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிகார மூர்க்கத்துடன் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் குற்றம்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்ற இவ்விவாதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் உரையாற்றுகையில்,

"எமது கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரஇ கூட்டுறவுத்துறை அமைச்சர் மன்சூர் இந்த அமைச்சு மூலம் நமது மாகாணத்திற்கும் மக்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றார்.

மாகாண சுகாதாரத் துறை சிறப்பான நிலையில் இருக்கின்ற போதிலும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இப்பகுதி வைத்தியசாலைகள் விடயத்தில் தான் விரும்பியவாறு அடாவடித்தனமான தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றார்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு இந்த வருடம் என்னால் ஒதுக்கப்பட்ட நிதியை கூட நான் கூறிய வேலைத் திட்டத்திற்கு பயன்படுத்தாமல் அவர் விரும்பியவாறு செலவு செய்துள்ளார். கடந்த வருடமும் அவர் இவ்வாறே தன்னிச்சையாக வேலைத் திட்டத்தை மாற்றியமைத்தார்.

இது குறித்து அவருடன் எனது செயலாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி செய்வதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மிக மோசமான செயற்பாடாகும்.

சாய்ந்தமருது வைத்தியசாலை சத்திர சிகிச்சை உபகரணங்கள் எங்கே?

சுனாமியால் அழிவடைந்து மீள் கட்டுமானம் செய்யப்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்குரிய மிகப் பெறுமதி வாய்ந்த சத்திர சிகிச்சை உபகரணங்களைக் கூட இந்தப் பணிப்பாளர் எவருக்கும் தெரியாமல் வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார் என்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

வைத்தியசாலை அபிவிருத்தி சபை எம்மிடம் முன் வைக்கின்ற   வேலைத் திட்டங்களுக்கே நாம் நிதி ஒதுக்கீடு செய்கின்றோம். ஆனால் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்இ தான் எதையும் செய்ய முடியும் என அதிகார மூர்க்கத்துடன் செயற்பட்டுக் கொண்டு எமது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

கடந்த மாகாண சபையில் அப்போது உறுப்பினராக இருந்த ஒருவர் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை கண்டித்து- இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பிரேரணை கொண்டுவந்த போது நானே முன்னின்று அவரைக் காப்பாற்றினேன்.

ஏனெனில் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதனால் ஆகும். ஆனால் அவர் தான்தோன்றித்தனமாக நடப்பதை மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. விரைவில் அவர் ஓய்வுபெற்றுச் செல்கிறார் என்பதற்காக எதையும் செய்து விட்டுப் போகலாம் என நினைக்கக் கூடாது. இவரது இந்த செயற்பாடு குறித்து மாகாண சுகாதார அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன்.

அதிகாரிகள் ஒருபோதும் அரசியல்வாதிகள் போன்று செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முற்பட்டால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.உயர் அதிகாரிகள் எப்போதும் மக்கள் சேவைக்காக  மனிதாபிமானத்துடன் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்  அப்போதுதான் அரசாங்கமும் மக்களும் எதிர்பார்க்கின்ற அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்தக் கோட்பாட்டை மீறும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களை இடமாற்றம் செய்து தண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை இந்த உயர் சபையில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .