2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க த.தே.கூ. முன்வரவேண்டும்'

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்பதுடன் எவ்வகையிலும் விட்டுக்கெர்டுப்பிற்கு இடமளிக்கக் கூடாது எனும் தீர்மானம் இன்று (31) நடைபெற்ற அம்பாறை மாவட்ட விஸ்வஹிந்து பரிசித் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

ம்பாறை மாவட்ட விஸ்வஹிந்து பரிசித் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் த.கயிலாயபிள்ளை தலைமையில் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அகில இலங்கை விஸ்வ ஹிந்து பரிசித்தின் ஒருங்கிணைப்பாளர்; கலாநிதி என்.கே.எஸ்.திருச்செல்வம் ஜி, இலங்கை ஸ்வயம் சேவா சங்க இணைப்பாளர் ஆர்.இராதாகிருஸ்ணன், ஆலையடிவேம்பு இந்துமாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட ஆலயத்தலைவர்கள், இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மாவட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அம்பாறை கரையோர மாவட்ட உருவாக்கப்படுதல் தடுக்கப்படல் வேண்டும்.

இந்திய துணைத்தூதரக அலுவலக கிளை கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும்.

தேசிய இந்து ஆலய மாநாட்டில் அம்பாறை மாவட்டத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.
ஆலயங்கள் அனைத்தும் சமய பணிகளோடு சமூகப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் இந்துக்கள் இந்துப் பாரம்பரியங்களை கடைப்பிடிக்கும் ஆடைகளுடன் அரச அலுவலகம் செல்ல அனுமதித்தல் வேண்டும்.

அம்பாரை மாவட்டத்தில்; இந்து வர்த்தகர் சங்க அமைப்பை உருவாக்க வேண்டும்.

தமிழர்களின் எல்லைக் கிராமங்களும் எல்லைகளும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள இந்நாட்டில் மாவட்ட மட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் பல்வேறு ஊடகங்களிலும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் இறுதியில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கியதான புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .