2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்: தயா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, -ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

கொழும்புக்கு அடுத்தபடியாக அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி செய்து, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்கள் நவீன நகரங்களாக மாற்றியமைக்கப்படுமென ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான தயாகமகே தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இன்று (08) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;,

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பிய பின்னர், நல்லாட்சியில் அம்பாறை மாவட்டத்தில் பள்ளிகள், கோவில்கள் என்று எதுவுமே உடைக்கப்படுவதுமில்லை காணிகள் சூறையாடப்படுவதிமில்லை.

எனது அரசியலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வந்த சத்திரசிகிச்சை உபகரணங்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றிவிட்டேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றனர். அப்படியொன்றும் நடைபெறவில்லை. எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலை பாரியளவில் சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்படும்.

அம்பாறை மாவட்டத்தில் வீட்டு வசதியில்லாத 27 ஆயிரம் குடும்பங்களுக்கு எதிர்வரும் 60 மாதங்களுக்குள் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கக் காணிகளில் வதியும் அனைவருக்கும் 2016ஆம் ஆண்டு நிறைவடைவதக்கு முன்னர் காணி உறுதியை பெற்றுக் கொடுப்பேன்.

டி எஸ் சேநனனாயக்கா அவர்களின் மக்கள் செயற்றிட்டங்களை மேலும் இம்மாவட்டத்தில் பலப்படுத்தி, கிராமங்கள் தோறுமுள்ள சகல நீர் நிலைகளையும் நவீனப்டபடுத்தி அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 60 மாத திட்ட சிந்தனையில் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு மற்றும் முதலீட்டு வலய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மிகக் கூடுதலான நன்மைகளை அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்.

எமது அம்பாறை மாவட்டத்துக்கு 1 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதோடு இப்பிராந்திய பெண்களின் சிறு கைத்தொழில் முயற்சிகளையும் ஊக்குவித்து அதனூடாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்க திட்மிட்டுள்ளேன்.

எமது மாவட்டத்துக்கு கொண்டு வருவதுடன் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத  பாதையை கரையோர பிரதேச வழியூடாக பொத்துவில் வரை கொண்டு செல்ல சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். மேலும், பொத்துவிலிலிருந்து அம்பாறை, மகஒயா, தெஹியத்த கண்டிய ஊடாக பொலநறுவை மட்டக்களப்பு - புகையிரத பாதையுடன் இணைக்க சகல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன்.

அம்பாறை மாவட்டத்தின் மக்கள் தேவைக்கு ஏற்றவாறு எல்லா பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் சகல வசதிகளுடனும் கூடிய முழு நிறைவான 25 தேசிய பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளென் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .