2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அபிவிருத்தித் திட்டங்கள் பாகுபாடின்றி முன்னெடுக்கப்படுகின்றன’

பைஷல் இஸ்மாயில்   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமல்ல இலங்கை முழுவதும் குடிநீர் திட்டத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில், பல மில்லியன் ரூபாய் நிதிகளை ஒதுக்கீடு செய்து, அனைத்துப் பிரதேசங்களுக்கும் சிறந்த குடிநீர்த்திட்டம் மற்றும் நகரத்திட்டமிடல்களை, எமது தேசியத்தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார்” என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

“அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பாகுபாடின்றி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

அம்பாறை, மத்தியமுகாம், சாளம்பைக்கேணி 01, 03, 04, 05 மற்றும் நாவிதன்வெளி 02, 04 ஆகிய கிராங்களில்  வாழும் மக்களுக்காக,  2ஆம் கட்ட குடிநீர் வழங்கும் திட்டங்களை, செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பித்து வைத்துப் பின்னர்  உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“60 கிலோமீற்றர் தூரத்துக்கு விஸ்தரிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், சுமார் 600 குடும்பங்கள் பயனடையவுள்ளன. இதில் எவ்வித இன மத, பிரதேச பாகுபாடுகளின்றி எமது கட்சித் தலைமையும், அதன் முக்கியஸ்தர்களும் அதன் மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட்டு வருவதை நீங்கள் அவதானிக்கலாம்.

“நாம் அனைவரும் இலங்கை மக்கள். நமக்குள் இன, மத, மொழி, கட்சி வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக அபிவிருத்தி திட்டங்களில் மு.கா கட்சியும், அதன் தலைமையும், மு.காவின் மக்கள் பிரதிநிதிகளும் ஒரு நாளும் பாகுபாடுகள் பார்த்ததே இல்லை” என்றார். 

​ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி. நிஸார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர், தவிசாளர் அப்துல் மஜீத், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சிப்போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .