2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொண்டர் ஆசிரியர் நியமனத் தெரிவில் ‘முறைகேடுகள் இடம்பெறவில்லை’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மே 16 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்கான தெரிவில், எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை எனவும், இன ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ எவ்விதப் பாரபட்சமும் காட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள, அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம், தனிப்பட்ட ரீதியில் எவருக்கும் அநீதியிழைக்கப்படவுமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ஐ.எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகளின் விசேட ஒன்றுகூடல், கல்முனையில் இன்று (16) நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டது.
சிலர், உண்மைக்குப்புறம்பாக பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய அவர்கள், அவ்வாறான பிரசாரங்களைக் கருத்தில் கொள்ளாமல், தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 456 தொண்டர் ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்தைக் கோருவதாகவும் குறிப்பிட்டனர்.
"கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் எமது சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டங்களின் பயனாக, நல்லாட்சி அரசாங்கம், அதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நியமனத்துக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்து, கல்வியமைச்சின் இணையத்தளத்தில் அவர்களது பெயர் விவரங்களை வெளியிட்டுள்ளது.
“ஜனவரி மாதம் 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்காக கேட்கப்பட்ட கல்வித்தரம், சேவைக்காலம் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளவர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் நேர்முகப் பரீட்சிக்குட்படுத்தப்பட்டு, முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“இத்தேர்வில் எவ்விதக் குளறுபடிகளும் இடம்பெறவில்லை. எவரும் முறைகேடாகத் தெரிவு செய்யப்படவில்லை. தகுதி, தராதரங்கள் இருக்கின்ற எவருக்கும் அநீதியிழைக்கப்படவுமில்லை. மிகவும் வெளிப்படைத் தன்மையுடனேயே நேர்முகப் பரீட்சையும் தெரிவும் இடம்பெற்றுள்ளன" எனத் தெரிவித்தனர்.
ஊடகங்களில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்கள், முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும் என, தமது சங்கம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்த அவர்கள், உரிய தகுதி, தராதரங்கள் இன்றி யாராவது முறைகேடாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தால், அவர் தொடர்பில் எவரும் எழுத்துமூல ஆதாரங்களுடன் ஆட்சேபனை தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X