2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மும்பை

மகாராஷ்டிராவின் 14-வது சட்டப்பேரவைக் கூட்டம்  நேற்றுக்காலை தொடங்கியதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோர் பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆதரவோடு பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றார்.

பெரும்பான்மை இல்லாத அஜித் பவார் ஆதரவோடு எவ்வாறு ஆட்சி அமைக்க பட்னாவிஸை ஆளுநர் அழைத்தார் என்றும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியும் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்  எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வைத்து, பெரும்பான்மையை பட்னாவிஸ் நிரூபிக்க வேண்டும்.

இதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின், முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸும் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

ஆளுநர் கோஷ்யாரி அழைப்பின் பேரில் இன்று உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 14-வது சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இதில் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

முன்னதாக, அவையில் மூத்த எல்எல்ஏவாக பாஜகவின் காளிதாஸ் கோலம்பர் தற்காலிக சபாநாயகராகப் பதவி ஏற்றார்.

அவர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப்பேரவைக்கு வந்த அஜித் பவாரை, அவரின் சகோதரியும், என்சிபி எம்.பி.யுமான சுப்ரியா சுலே கட்டித்தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார்.

அப்போது சுப்ரியா சுலே நிருபர்களிடம் கூறுகையில், "மிகப்பெரிய பொறுப்பு இந்த நாளில் வந்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.

என்சிபி மூத்த தலைவர்கள் அஜித் பவார், சாகன் பூஜ்பால், காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், பிரிதிவிராஜ், முன்னாள் சபாநாயகர் வால்சே பாட்டீல், பாஜகவின் ஹரிபாகு பாகடே உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் முதலில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பி தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .