2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்காவில் வாகீன் சூறாவளியால் தெற்கு கரோலினாவில் அவசரகாலநிலை

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள தெற்கு கரோலினா மாநிலத்தில், வார இறுதியில் கிடைக்கப்பெற்ற அதீத மழைவீழ்ச்சி காரணமாக, பாரியளவில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அங்கு அங்கு அவசரகாலநிலையை பிறப்பித்துள்ளார்.

கடந்த வாரம் முழுவதும் பெரும்பாலாக மழை பெய்திருந்த நிலையில், இம்மாநிலத்தின் வானிலை, கரீபியனில் தோன்றியுள்ள வாகீன் சூறாவளியுடன் தொடர்புபட்டுள்ள நிலையில், நிலைமை இன்னும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஹாமாஸில் இருந்து நகர்ந்துள்ள வாகீன் சூறாவளி மேலும் பலம் பெற்று மணிக்கு 250 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வீசுகின்றது. அத்துடன், நான்காவது பிரிவு சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூறாவளி அமெரிக்காவின் கிழக்குப் பகுதியை தாக்குமென எதிர்பார்க்கப்படாவிட்டாலும் அதனுடன் இணைந்த ஈரப்பதன் காரணமாக தெற்கு கரோலினாவில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அவசரகாலநிலை ஜனாதிபதி ஒபாமாவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள், வெள்ளத்தை சமாளிப்பதுக்கு மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை (01) பஹாமாசின் குரூக்ட் தீவுகளில் சூறாவளி வாகீனில் சிக்கி 33 கப்பற் சிப்பந்திகளுடன் சிக்கி காணாமற் போன 224மீற்றர் நீளமான சரக்குக் கப்பலான எல் பரோவினது என நம்பப்படும் உயிர் காப்பு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதியாக இந்தக் கப்பலில் தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும், கப்பலை முன்னோக்கி செலுத்த முடியாமலிருப்பதாகவும் தகவல் கிடைத்ததாக கரையோர காவற்படை தெரிவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .