2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பல்மைராவைக் கைப்பற்றும் இறுதித் தருணங்களில் சிரிய இராணுவம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் பழைமையான நகரமான பல்மைராவை நோக்கி நகர்ந்துள்ள சிரிய அரசாங்கப் படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து பல்மைராவைக் கைப்பற்றும் இறுதித் தருணங்களில் இருப்பதாக அரசாங்க ஊடகமும் கண்காணிப்புக் குழுவொன்றும் கடந்த புதன்கிழமை (23) தெரிவித்துள்ளன.

அரசாங்க தொலைக்காட்சியின் தகவலின்படி, ரஷ்ய வான் தாக்குதல்களினதும் லெபனான் போராளிகளின் உதவியுடனும் பல்மைராவிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்திலேயே சிரிய இராணுவம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடவுளின் சித்தத்தின்படி, இன்னும் சில மணித்தியாலங்களில் பல்மைராவுக்குள் நுழைந்து கைப்பற்றவுள்ளதாக, பல்மைராவின் புறநகர்ப் பகுதியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பட்ட சிரிய இஹ்பரியா தொலைக்காட்சிக்கு ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கப் படைகள், பல்மைராவிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பல்மைராவை கைப்பற்றுவதற்கான வலிந்த தாக்குதலை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரஷ்ய போர்விமானங்களால் ஆதரவளிக்கப்பட்ட சிரிய இராணுவம் ஆரம்பித்திருந்தது.

கடந்த வருடம் மே மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ் இடம் வீழ்ந்த, யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக பாராம்பரிய இடங்களில் ஒன்றான பல்மைராவில் உள்ள 2,000 வருடங்கள் பழைமையான பெல் கோவில் உட்பட பல பிரபலமான இடங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆல் அழிக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .