2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் உண்ணாவிரதம் விமர்சனத்தைக் கிளப்பியது

Editorial   / 2017 ஜூன் 11 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகன், நேற்று  (10) மாலை முதல், காலவரையறையற்ற ​உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் குறித்த பல்வேறு விமர்சனங்கள் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்றன.

வங்கிக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்குச் சிறந்த கொள்முதல் விலை அளிக்கப்படல் வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விவசாயிகள், கடந்த 1ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, அறுவர் உயிரிழந்திருந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தின் மையப் புள்ளியான மாண்ட்சோரில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, மாநிலம் முழுவதும் மீண்டும் அமைதி நிலவவேண்டும் என்று கோரி, முதலமைச்சர்  சிவராஜ் சிங் சௌகான், தலைநகர் போபாலிலுள்ள தசரா மைதானத்தில்? காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இதையடுத்து, விவசாயிகள் அமைதியைப் பேண  வேண்டும் என்று கோரிய, மாநில விவசாய அமைச்சர் கோரிஷங்கர் பிஸென், விவசாயிகளுக்கான வங்கிக் கடன் தள்ளுபடி​ செய்யப்படாது என்றும் ஏனெனில், அவர்களுக்கு ஏற்கெனவே, வட்டியில்லாத கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

எனினும், “விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வீதியில் நிற்கும் நேரத்தில், முதலமைச்சர், அவருடைய போலித்தனமாக நாடகத்தை அரங்கேற்றுகின்றார். இந்த நாடகத்துக்காக, அவர் (முதலமைச்சர்) மில்லியன் கணக்கில் செலவிடுவார்” என்று, மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் ​அஜெய் சிங் விமர்சித்துள்ளார்.

“மலிவான தந்திரங்களைப் பயன்படுத்தி, மக்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினையிலிருந்து,  அவர்களைத் திசைதிருப்ப, முதலமைச்சர் முயல்கிறார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், “விவசாயிகள் அமைதியாகும் வரைக்கும், என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட மாட்டாது. விவசாயிகளுக்குள்ள தேவை மற்றும் வேதனை குறித்து, நான் அறிந்து வைத்துளேன். எனினும், வன்முறையை அமைதிக்குக் கொண்டுவரவேண்டும் என்று நான் கோருகின்றேன். விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளிப்பதோடு, குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்படும் என்பதையும் நான் உறுதிப்படுத்துகின்றேன்” என்று, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X