2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறைச்சாலை உணவை மோர்சி தவிர்ப்பு

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2013ஆம் ஆண்டு பதவியில் அகற்றப்பட்டதிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ள எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி, தனது உயிருக்கு அஞ்சி, உணவு உள்ளெடுப்பதைத் தவிர்த்துள்ளார். 


உளவு பார்த்ததாகவும் இரகசிய ஆவணங்களை வெளியிட்டதாகவும் குற்றஞ்சாட்டித் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை சனிக்கிழமை (07) ஆரம்பமானபோது, ஜூலை 21, 22ஆம் திகதிகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள உணவு, பாரிய குற்றமொன்றுக்கு வழிவகுத்ததாக மோர்சி தெரிவித்துள்ளார். ஆனால், தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விரிவாகக் கருத்துத் தெரிவித்திருக்கவில்லை.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எகிப்தின் முதலாவது ஜனாதிபதியான மோர்சி, இரத்தத்தில் குறைவான சீனியின் அளவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை வைத்தியர்களை சந்திக்க அனுமதிக்குமாறும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார். 
மேலும், தனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்த, சிறையில் இடம்பெற்ற ஐந்து சம்பவங்கள் தொடர்பாக தனது பாதுகாப்புக் குழுவுடன் கலந்துரையாடவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மோர்சியினுடைய இந்த வேண்டுகோள்களை அடுத்து, அவர் மீதான மருத்துவப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இராணுவ மற்றும் அரச இரகசியங்களை வெளிப்படுத்தி, கட்டார் நாட்டுக்காக உளவுபார்த்து, எகிப்தின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில் மோர்சியும், இன்னும் 10 பேரும் கெய்ரோ குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். 

நீண்ட காலமாக ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக், மக்கள் எழுச்சியின் காரணமாக அகற்றப்பட்டு, ஒரு வருடத்துக்கு பிறகு ஆட்சிக்கு வந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான மோர்சி, அவருக்கெதிராக பாரிய போராட்டங்கள் இடம்பெற்று, ஜூலை 2013 இல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார். 

சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது கொலை, கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மோர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .