2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்டத்தில் சம்பியனானது விநாயகபுரம் மின்னொளி

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 31ஆவது ஆண்டு நிறைவையிட்டு நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகமும் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் சம்பியனாகியது.

றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். அழகுதுறை தலைமையில் தம்பிலுவில் தேசிய கல்லூரி பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கால்பந்தாட்த் தொடரின் இறுதிப் போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தை வென்றே மின்னொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

அம்பாறை மாவட்டத்திலிருந்து 20 கால்பந்தாட்டக் கழகங்கள் கலந்துகொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே மின்னொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது. இத்தொடரின் நாயகனாக மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் ம. சங்கர் தெரிவானதோடு, சம்பியனான மின்னொளி விளையாட்டுக் கழகத்துக்கு 15,000 ரூபாயும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலிருந்து கிரிக்கெட் கழகங்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தை வென்று லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கிரிக்கெட் இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய விநாயகர் விளையாட்டுக் கழகம் 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு, 103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 9.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனாகி அமரர் பேரம்பலம் ஞாபகார்த்த கிண்ணத்தையும் 25,000 ரூபாய் பணப்பரிசிலையும் தட்டிச் சென்றது.

இத்தொடரின் நாயகனாக திருக்கோவில்-03 குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் சதீசன் தெரிவானதுடன், இறுதிப் போட்டியின் நாயகனாக லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் க. யுவேஸ் தெரிவானார்.

இந்த இறுதிப் போட்டிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்ததுடன் நிகழ்வில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் பி. மோனகாந்தன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே. பண்டார, ஓய்வு நிலைய கோட்டக்கல்வி அதிகாரி வ. ஜந்தன், அனுசரனையாளர்கள் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள், கழக வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X