2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனாகியது விநாயகபுரம் மின்னொளி கழகம்

எஸ்.கார்த்திகேசு   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

அம்பாறை மாவட்டத்திலிருந்து 26 கால்பந்தாட்டக் கழகங்கள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை வென்றே மின்னொளி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் திருக்கோவில் பிரதேச சபையின் உறுப்பினருமான கே. கமல்ராஜன் தலைமையில் விநாயகபுரம் சக்திசன் விளையாட்டு மைதானத்தில் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றிருந்தது.

இறுதிப் போட்டியின் முதற்பாதி முடிவு வரை இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் மின்னொளி விளையாட்டுக் கழகம் கோலொன்றைப் பெற்றதைத் தொடர்ந்து போட்டி விறுவிறுப்பை அடைந்தது. இந்நிலையில், மின்னொளி விளையாட்டுக் கழகம் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இவ்வாண்டுக்கான சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் அமரர் தமப்பிராசா வரதராஜன்   ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தையும் 15,000 ரூபாய் பணப்பரிசிலையும் பெற்றது. உதயசூரியன் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் 10,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றது.

இத்தொடரின் நாயகனாக விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் ரவிக்குமாரும் இறுதிப் போட்டியின் நாயகனாக அதேயணியின் கோல் காப்பாளர் சிவகுமாரும் தெரிவாகினர்.

இறுதிப் போட்டியில், திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி. கமலராஜன், உப தவிசாளர் எஸ். விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரனின் அவர்களின் செயலாளர் டி. சுரேந்திரன், சிவஸ்ரீ.யுதர்சன் சர்மா, பிரதேச சபை உறுப்பினர்களான ஜே. ஜெயச்சந்திரன், கே. காந்தரூபன், அனுசரனையாளர்கள் விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், கழக வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .