2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்: பீ.எச்.அப்துல் ஹமீத்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சரியான உச்சரிப்புகள் இல்லாமல் தமிழ் வானொலிகளின் உரையாடல்கள் தமிங்கிலிஸ் மயமாகுவதை தடுப்பதற்கு நாமெல்லோரும் நல்ல தமிழில் உரையாடுவதோடு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பழக வேண்டும் என உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சியாக பறக்கவேண்டிய சிறுவயதில் அழையாத விருந்தாளியாக இலங்கை வானொலி கலையகத்தில் கால்பதித்த பீ.எச்.அப்துல் ஹமீத், இன்று உலகம் போற்றும் சிறந்த அறிவிப்பாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பல பரிமாணங்களில் எம் முன் பரிணமித்துக்கொண்டிருப்பது கண்கூடு.

இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது.

வானலையில் தனது குரலும் ஒலிக்காதா என்று ஏங்கிய சின்னஞ் சிறு வயதில் இலங்கை வானொலி கலையகத்திற்கு செல்லும் வாய்ப்பு அப்துல் ஹமீத்துக்கு எதிர்பாராதவிதமாக கிட்டியது.

இலங்கை வானொலியில் அக்காலத்தில் ஒலிபரப்பப்பட்ட 'சிறுவர் மலர்'  நிகழ்வை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இவரது சிநேகிதன் ஜோசேப் எட்வர்ட்டுக்குக் கிட்டவே, அவருடன் இவரும் இணைந்து அந்நிகழ்வை பார்க்கச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் 'பச்சைமலைத்தீவு'  நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிக்கவிருந்தவர் சமூகமளிக்கவில்லை. நாடகத்தையும் இடைநிறுத்த முடியாத இக்கட்டானதொரு சூழ்நிலை. இந்நிலையில், நாடகத்தை பார்வையிட வந்த பார்வையாளர்களிடம் குரல் தேர்வு நடத்தப்பட்டது. அங்கேதான் இவருக்கான அதிர்ஷ்டமும் கிட்டியது.

குரல் தேர்வின் இறுதியில் அந்நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியது. இதுவே அவர் உலக அறிவிப்பாளராக மிளிருவதற்கு ஆரம்பப்படியாக அமைந்தது.  அப்போது அவருக்கு 10 வயது.

இவரது சிறந்த குரல்வளமே அவர் கடல் கடந்து செல்வதற்கு காரணமானது. வெறுமனே அறிவிப்புத்துறையில் மிளிராமல் ஒளிபரப்பு, வெள்ளித்திரை, மேடை, நாடகம், வசன அமைப்பாளர், பாடலாசிரியர் என பல துறைகளிலும் இவரது திறமைகள் இன்றுவரையிலும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றன.

வானலையில் இவரது குரல் ஒலிக்கத் தொடங்கி 50 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், சிறந்த இளம் அறிவிப்பாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் அப்துல் ஹமீத்தையே சாரும்.

இவரது மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் சென்று அங்கு தமது அறிவிப்புத்துறையினூடாக மொழித்திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அறிவிப்புத்துறையின் முன்னோடியாக விளங்கும் இவர், தொகுத்தளித்த நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது 'பாட்டுக்குப் பாட்டு'. 500 வாரங்களையும் கடந்துவிட்ட இந்நிகழ்ச்சி பல பாடகர்களை உலகறியச் செய்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

''அறிவிப்பு பணியில் ஈடுபடுபவர்களால்தான் தாய்மொழியும் வளர்க்கப்படவேண்டும். அன்று இலங்கை வானொலியில் அறிவிப்புத்துறையில் ஓர் உச்சரிப்பு பிழைவிட்டாலும், அதற்கான தண்டனை மிக வலுவனாதாக இருந்தது. அப்படித்தான் நாங்கள் அன்று எங்கள் தாய்மொழியை எல்லோருக்கும் கொண்டு சென்றோம். இன்று அறிவிப்புத்துறையில் உள்ளவர்கள் அதனை சரியாக செய்கின்றார்களா என்பதே கேள்விக்குறிதான்? இன்றைய அறிவிப்பாளர்கள் தமிழ்மொழியை மட்டுமன்றி வேற்றுமொழிகளையும் கலந்து சம்பாஷனை வடிவில் அறிவிப்புசெய்வதால் எதிர்காலத்தில் கொச்சைத் தமிழ் மட்டுமே நிலைக்கப்போகிறது...'' என்பது இவரது அறிவிப்புத்துறை சார்ந்த ஆதங்கம் ஆகும்.

உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், 'தமிழ்மிரர்' இணையத்தளத்தின் கலைஞர் நேர்காணல் பகுதிக்காக வழங்கிய நேர்காணலினை 'வீடியோ' வடிவில் இங்கே காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • srikanth Saturday, 25 December 2010 09:30 PM

    பீ எச் அப்துல்ஹமீத் தமிழ் உலகத் தமிழ் என்பதைவிட இசைத்தமிழ் என்று சொன்னால் பொருந்தும்!
    இளமையாக தோற்றமளிக்கிறாரா?
    தலையை பாருங்களேன்!
    பொய்முடி (சவுரி) அணிந்தால் அவர் கதாநாயகன் தான், என்ன?

    Reply : 0       0

    புதியவன் Wednesday, 31 July 2013 12:27 PM

    பார்ப்பனியத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்காமல் தமிழை வளர்ப்பது கடினமே.

    Reply : 0       0

    K.Chandrasekaran Wednesday, 09 January 2013 12:41 PM

    என் நண்பன் ஹமீதின் இந்த செவ்வி ஊடகத்துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு நல்லதொரு அறிவுறையாக அமையும் என்பது என் நம்பிக்கை... பேட்டி காணும் சகோதரி கோகிலவாணியைப் பாருங்கள்...ஆரம்பத்தில் மிகவும் தயங்கித் தயங்கி கொச்சையாகப் பேசியவர்...இடைநடுவில் நல்ல தமிழில் பேசுவதை...பேச முயற்சிப்பதை நீங்கள் அவதானிக்கலாம்....இதில் இருந்து என்ன தெரிகிறது... நல்ல தமிழ் யாரையும் கவரும்...எல்லோரையும் போய்ரச்சேரும். ஹமீட் நலமுடன் நீடு வாழ வாழ்த்துகிறேன்...சகோதரி கோகிலவாணி உங்களுக்கு எமது வாழ்த்துகள்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 18 February 2012 07:24 PM

    வான் எல்லாம் பரவட்டும் உன் புகழ். வாழ்க வளமுடன்.

    Reply : 0       0

    arshad Saturday, 17 December 2011 04:29 PM

    திரும்பவும் இலங்கை வானொலியில் பணியாற்ற வாருங்கள் இன்னுமொரு தலைமுறையும் தமிழின் பயன் பெறும்.

    Reply : 0       0

    imam Saturday, 17 December 2011 03:21 PM

    இந்த செவ்வியை கேட்ட போது அப்துல் ஹமீது அவர்கள் தான் தமிழின் பிறப்பிடம் போல் தெரிகிறது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Sujitkumar, Norway Saturday, 10 December 2011 02:01 PM

    'இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்டு' என B. H. அப்துல் ஹமீத் ஆரம்பிக்கும் போதே உள்ளம் துள்ளும்... 83ல் B. H. அப்துல் ஹமீத், K. S. ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், இவர்களுடன் மயில்வாகனம் சர்வானந்தா வையும் சந்தித்து இன்னும் பசுமையான அனுபவமே.
    எல்லோருமே தமிழைத் தமிழாக உச்சரித்து இலங்கைத்தமிழ் வானொலிக்கு சிறப்பைச் சேர்த்தவர்கள்.
    B. H. அப்துல் ஹமீத் தன் வாழ்வையே தமிழுக்கு அர்பணித்தவர் என்றால் மிகையாகாது. தன் துணையைக்கூட தமிழுக்காக தேர்ந்தெடுத்தவர். இவரது சேவை தமிழுக்கு இன்னும் தேவை..

    Reply : 0       0

    SSS Wednesday, 16 November 2011 01:16 AM

    அப்துல் ஹமீடிங் பாட்டுக்கு பாட்டு, அருணாவின் ஆறு கேள்விகள் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். நானும் பங்கு பற்றியவன் என்பதால் என்னால் மறக்க முடியவில்லை. மிஸ்டர் ஹமீது திரும்பவும் இலங்கை வானொலிக்கு வாருங்கள்.

    Reply : 0       0

    M.I.M.ALMusfik Sunday, 21 August 2011 03:23 AM

    வாழ்க தமிழ், திரு. அப்துல் ஹமீதின் கருத்து தமிழை நேசிப்பவர்களுக்கு தமிழின் வருங்காலத்தை உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்..
    தமிழ் பேசும் அனைவரும் இதனை ஒரு பாடமக கொண்டு, இனி தமிழை மேம்படுத்துவோம்.

    Reply : 0       0

    MM. Riyas Tuesday, 19 April 2011 09:06 PM

    நான் திரு. ஹப்துல் ஹமீது அவர்களை மிகவும் விரும்புகின்றேன் அவர் பல்லாண்டு வாழ எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Ganesha Tuesday, 08 March 2011 06:28 AM

    எனது மிக மிக அபிமானத்துக்குரிய அப்துல்ஹமீது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Mahadevah Saturday, 11 December 2010 06:37 PM

    இன்றைய வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் கட்டாயமாகக் கவனிக்க வேண்டிய ஒரு செவ்வி-செய்தித்தொகுப்பு இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    Reply : 0       0

    R R Piraba canada Friday, 24 December 2010 04:42 AM

    எனது மான சீக குரு மதிப்புக்குரிய ஹமீத் ஐயா அவர்களை வெல்ல தமிழுலகில் யாரும் இல்லை அவர் என்றும் நீடுழி வாழ்க. அவர் வாழும்வரை அவரே அறிவிப்புலகின் சர்க்கரவர்த்தி.

    Reply : 0       0

    Dawood Wednesday, 22 December 2010 04:07 PM

    அப்துல் ஹமீத் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் நாம் அவரின் குரலை கேட்பதற்காக வாடுகிறோம்;. அவருக்கு நிகராக வேறு யாரையும் நாம் இவ் உலகில் தற்போது காண்பது மிகவும் முடியாத ஒரு விடயம்.

    Reply : 0       0

    xlntgson Monday, 20 December 2010 09:16 PM

    மிகவும் இளைமையாக தோன்றுகிறாரே, பழைய படமோ?
    வாழ்த்துகள்! நானும் தமிழை சிறப்பாக உச்சரிப்பு செய்ய வேண்டும் என்பதில் கவனமானவன்! அந்த காலத்தில் இவரது உச்சரிப்பை மிக உன்னிப்பாக அவதானிப்பேன், இவர் இலங்கையரா இந்தியரா மலேசியரா சிங்கப்பூர்காரரா? என்று எண்ணி வியப்பேன். இவரது தமிழ் உலகத்தமிழ். இலங்கைத்தமிழ் அல்ல!
    இலங்கைத்தமிழ் சிறந்த தமிழ் எனப்பட்டபோதிலும் கொச்சை கொட்டிக்கிடக்கிறது, அதையே அழகென்பதைக்காட்டிலும் தனித்துவம் அடையாளம் என்ற அளவிலேயே அதற்கு முக்கியத்வம். வடிவு அழகாகாது வடிவு வேறு அழகு வேறு, figure!

    Reply : 0       0

    Somaskanda Kurukal Sunday, 19 December 2010 02:07 AM

    அருமையான பேட்டி. மிக்க நன்றி தமிழ் மிரர். இது போன்ற பல வானொலிக் கலைஞர்களின் பேட்டிகளையும் நாங்கள் தாழ்மையாக எதிர்பார்கிறோம்.

    Reply : 0       0

    ramkumar Thursday, 16 December 2010 05:47 PM

    மிகச்சிறந்த அறிவிப்பாளர் திரு .அப்துல் ஹமீது . எமக்கு பெருமை சேர்க்கும் தமிழன். நான் உனது தமிழ் மொழிக்கு அடிமை.

    Reply : 0       0

    Uthayakumar Wednesday, 15 December 2010 09:01 AM

    கோகிலவாணி, அப்துல் ஹமீதுடன் அருமையான நேர்காணல், தமிழ் பற்று உள்ளவர்களுக்கு பஞ்ச அமிர்தம் சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு!
    எனது கருத்துப்படி, தமிழர்கள் நாம் தமிழில் பேசுவது மாத்திரமல்ல, தமிழை சரியாக பேச வேண்டும்! செய்வன திருந்த செய்வோம்! பேச்சு தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் வித்தியாசம் இருக்க கூடாது. ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழையும் பேசுவோம். "இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!"

    Reply : 0       0

    m.suresh Monday, 13 December 2010 06:30 PM

    திரு . அப்துல் ஹமீதின் தமிழைக் கண்டு வியந்தேன். அருமையான பேட்டி.
    வாழ்க தமிழ் !

    Reply : 0       0

    POTTUVIL ASMIN Sunday, 12 December 2010 01:10 PM

    உயர் தமிழின் உன்னதத்தை உலகமெங்கும் பறைசாற்றும் எண்திசையும் போற்றும் எம்தேசத்தின் அறிவிப்பாளர் திரு.அப்துல் ஹமீத் அவர்களை அறிவவிப்பு சோலையின் ''அறிவுப் பூ'' என்றால் மிகையில்லை.
    சிந்திக்க சொல்லும் சிறந்ததொரு நேர்காணல். கோகிலவாணிக்கும் வாழ்த்துக்கள்.

    -பொத்துவில் அஸ்மின் -

    Reply : 0       0

    Siva Sunday, 12 December 2010 12:33 PM

    நான் இவரை விரும்புஹிறேன். அழகிய கதைப்பு, ஆழ்ந்த கருத்து அழகிய முகம். கடவுளின் ஆசி அவருக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .