2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சில்க் ஆகிறார் வித்யா...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னிந்தியாவை மட்டுமன்றி உலகத் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கவர்ச்சி தேவதை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் அவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார்.

இடைக்காலங்களில் வந்த தென்னிந்தியப் படங்களில் ஹீரோ, ஹீரோயின்களை விட அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்டவர் சில்க் ஸ்மிதா. குறிப்பாக, ரஜினி, கமல் படங்களில் அவர்களை விட அதி முக்கியமானவராக இருந்தவர் அவர்தான் என்பதே உண்மை. அந்தளவுக்கு அவரது அழகும், கவர்ச்சியும் அந்தக் காலத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது.

சில்க் என்றாலே மெய் சிலிர்க்கும் அளவுக்கு கொடிகட்டிப் பறந்தவர். அவர் கடித்து கீழே வைத்த ஆப்பிளை ஏலம் விட்ட கதையும் அக்காலத்தில் இடம்பெற்றது. மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் சில்க்.

அப்படிப்பட்ட சில்க்கின் வாழ்க்கை மிகவும் சோகமயமாக அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும். திடீரென அவர் ஒரு நாள் இறந்து போனபோது அத்தனை ரசிகர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

திரைத்துரையினர் மட்டுமன்றி கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களிலும் பள்ளிகொண்டுள்ள சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. ஏக்தா கபூர் தயாரிப்பில் வித்யா பாலன், சில்க்கின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.  'த டர்ட்டி பிக்சர்' என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை மிலன் லூத்திரா இயக்கவுள்ளார். இவர்தான், வித்யாவை மட்டுமே இப்படத்தின் நாயகியாக்க முடியும் என்று ஏக்தாவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள லூத்திரா, 'வித்யா பாலன் ஒரு முழுமையான இந்தியப் பெண். கவர்ச்சிகரமான, அதேசமயம், வசீகரமான தோற்றம் கொண்டவர். சிறந்த நடிகை. மேலும் தென்னிந்திய அடையாளங்களும் அவரிடம் காணப்படுகின்றன. சில்க்கின் கதாபாத்திரத்துக்கு வித்யாவைத் தவிர வேறு யாரும் எனது மனதில் தோன்றவில்லை' என்று கூறியுள்ளார்.

இதேவேளை சில்க் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏக்தா கபூர், '1970களில் திரையுலகில் ஆணாதிக்கமே அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் அதை தாண்டி, அதை உடைத்து வெற்றி பெற்ற ஒரே நடிகை சில்க் மட்டுமே. அவரது வாழ்க்கை வரலாறு நிச்சயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, அப்பாவிச் சிறுமியாக இருந்து, பின்னர் கவர்ச்சி ராணியாக மாறி புகழின் உச்சியில் இருந்த சில்க்கின் வாழ்க்கை மிகப் பரிதாபமானது, சோகம் நிறைந்தது' என்கிறார் ஏக்தா.

இந்நிலையில் இப்படத்திற்காக வித்யா பாலன் நிறைய பயிற்சிகளை ஆரம்பித்துள்ளாராம். சில்க்கின் நடை, உடை, பாவனை என பலவற்றையும் அவர் பார்த்து ஆய்வு செய்து வருகிறார். சில்க்கின் உடல்வாகையும் அவர் உன்னிப்பாக கவனித்து மனதில் பதிய வைத்து வருகிறாராம்.  இதேவேளை, இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அதாவது திரைப்பட இயக்குநர் வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • rahman Monday, 15 November 2010 06:15 PM

    நல்ல ஒரு முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X