2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இப்போதைக்கு சொல்லமாட்டேன்!

Menaka Mookandi   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார் நடிகை பிரியாமணி. தமிழ் திரைப்படங்களில் நடிக்கவும் கதை தேடி வருகிறாராம்.

இந்நிலையில், பிரியாமணி அளித்துள்ள பேட்டியொன்றில், தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட உலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் நடிக்க விரும்பினால் அம்மா, அண்ணி கதாபாத்திரங்களையே கொடுக்கிறார்கள்.

இந்த நிலைமை மாற வேண்டும். இந்தியில் திருமணத்துக்கு பிறகும் கரீனாகபுர், வித்யாபாலன் போன்ற நடிகைகள் கதாநாயகிகளாகவே நடிக்கின்றனர். அந்த நிலைமை இங்கு வர வேண்டும்.

தமிழ் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளது. டைரக்டர்கள் தான் என்னை அழைக்க வேண்டும். நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது.

என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகே என் திருமணம். இந்தி திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரியாமணி.



ரவிக்கு உடன்பாடில்இயாம்!


எனக்கு சொக்லேட் போய் இமேஜ் இருப்பதாக சொல்வதில் உடன்பாடில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். அண்மையில் வெளியான நிமிர்ந்து நில் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி கூறியதாவது,

தொடர்ந்து காதல் கதைகளில் மட்டும் நடிக்கிறீர்களே. ஆக்ஷன் வராதா? என்று கேட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில், பேராண்மையில் நடித்தேன். பாராட்டினார்கள்.

பிறகு ஆதி பகவன், நிமிர்ந்து நில் படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு நடிகன் என்பவன், இமேஜ் என்கிற குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பது என் கருத்து.

நானும் அந்த இமேஜ் என்ற மாயையை உடைக்க போராடிக் கொண்டிருக்கிறேன். என்றாலும், அவ்வப்போது காதல் கதைகளிலும் நடிக்கிறேன். அப்படி இருந்தும் எனக்கு சொக்லெட் போய் இமேஜ் இருப்பதாகச் சொல்வதில் உடன்பாடில்லை.

நான் நடித்த பூலோகம் விரைவில் ரிலீசாகிறது. அடுத்து என் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கிறேன். டைட்டில் முடிவாகவில்லை.

ஆக்ஷனும், காதலும் சரிவிகிதத்தில் இருக்கும். நயன்தாரா ஜோடி. இதுவரை ஜோடியாக நடித்தவர்களில், எனக்கு பிடித்த நடிகை ஜெனிலியா மட்டும்தான் என்று கூறியுள்ளார் ரவி.




அஞ்சானில் இந்தி நடிகை


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் அஞ்சான். சமந்தா ஹீரோயின். மற்றும் வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், விவேக், பிரம்மானந்தம் சூரி உட்பட பலர் நடிக்கின்றனர்.
 
யூடிவி மோஷன் பிக்சர்ஸும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் இந்தி நடிகை சித்ரங்காடா சிங் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியுள்ளார்.

விவேகா எழுதிய, சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி. நான் சில்க்ஸ்மிதா கம்யுனிட்டி என்று தொடங்கும் அந்தக் குத்துபாடலின் ஷூட்டிங், ஒரு கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து மும்பையில் படமாக்கப்பட்டது. இதில் ஆட சித்ரங்காடாவுக்கு சம்பளம் 1 கோடி ரூபாய்.



அமீர்கான் மீது முறைப்பாடு


ஏழைகளின் இடத்தை மோசடி செய்ததாக அமிர்கான் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பங்களா கட்ட ஏழைகள் நிலத்தை ஆக்கிரமித்ததாக இந்தி நடிகர் அமீர்கான் மீது முறைப்பாடு கூறப்பட்டுள்ளது.

மும்பை பாத்ரா பகுதியில் சொகுசு பங்களா கட்ட அமீர்கான் திட்டமிட்டுள்ளார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இது கட்டப்பட உள்ளது.

இதற்காக அங்குள்ள ஹவுசிங் சொசைட்டியிடம் ஒப்பந்தம் போட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும்படி வற்புறுத்தினாராம்.

ஆனால் பவேலா என்ற 87 வயது மூதாட்டி மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டாராம். ஹவுசிங் கொசைட்டியின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.




சஞ்சய்தத்துக்கு மீண்டும் சிறை


மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அப்போது சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு தடா கோரர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் வெளியே வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சஞ்சய்தத்தின் தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் எஞ்சிய சிறைக்காக சரண் அடைந்த சஞ்சய்தத், பூனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சஞ்சய்தத் 15 நாட்கள் பரோலில் வந்தார். இந்த பரோல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிந்த பிறகு அவர் சிறைக்கு திரும்பினார்.

இதற்கிடையே சஞ்சய்தத்தின் மனைவி மானியதாவுக்கு இதயம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் பரோல் கேட்டார். அவருக்கு ஒரு மாதம் பரோல் அனுமதிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் வெளியே வந்தார். ஜனவரி 21ஆம் திகதியுடன் அவரது பரோல் முடிந்தது. மனைவி அருகே இருக்க வேண்டி இருப்பதாக கூறி ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு கேட்டார்.

இதையடுத்து மேலும் ஒரு மாதம் அவருக்கு நீடிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பு கேட்டதால் இரண்டாவது ணிறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது.




குக்கூ  - விமர்சனம் 


கண்களிருக்கும் மனிதர்களின் காதலுக்கு ஆயிரம் தடைகள்.. பிரச்சினைகள். அதை பல படங்களில் பார்த்தும் விட்டோம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரின் காதலுக்கு வரும் சோதனைகள்... அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை மனம் வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் ராஜு முருகன்.
 
வெறும் பொழுதுபோக்கு, குத்துப் பாட்டு, கேவலமான காமெடியெல்லாம் ஏதுமில்லாத அழகான படமாக வந்திருக்கிறது குக்கூ. அன்பின் வலிமை அன்பானவர்களை ஒன்று சேர்க்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் தமிழுக்கும் கொடிக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ... எங்காவது மோதிக் கொள்வார்களோ.. அந்த வாகனம் இடித்துவிடுமோ என பதறுகிறது மனசு.

பார்வையில்லாதவர்களின் உலகம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் எள்ளலை, அவர்களின் சந்தோஷங்களை இத்தனை இயல்பாக, அதே நேரம் பிரச்சார தொனியில்லாமல் யாரும் சொன்னதில்லை. பார்வையில்லாத ஒரு காதலியும், காதலனும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் இருவேறு திக்கில் பிரிந்து போன பிறகு.. மீண்டும் சேர்வதில் உள்ள சிக்கலை யோசித்துப் பார்த்தால்... அடே யப்பா... எவ்வளவு பெரிய துயர் இது! இருவரும் ஷண்டும் சந்திக்கிறார்களா.. அந்தக் காதல் கைகூடியதா என்பது கதை.

பார்வையற்ற நாயகர்கள் வேடத்தில் இதற்கு முன் நடித்த கமல், விக்ரமையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் தினேஷ். குறிப்பாக அவரது உடல்மொழி. தன் காதலி எதிரில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்லும்போது அந்தக் கோபம்.. காதலி சமாதானமானதும் மகிழ்ச்சியைக் காட்டும் விதம்... சினிமா கேட்க தியேட்டருக்குப் போய் பண்ணும் நக்கல்ஸ்... எல்லாவற்றிலும் ஒரு உண்மையான மாற்றுத் திறனாளியை நகலெடுத்திருக்கிறார் தினேஷ். வெல்டன். காதலியாக வரும் மாளவிகாவும் பிரமிக்க வைக்கிறார்.

படத்தில் நடித்த அனைவருமே இயல் மீறாமல் நடித்துள்ளனர். படத்தில் குறைகள் என்று சொல்ல கொஞ்சமல்ல.. நிறையவே இருக்கிறது. ராஜூ முருகன் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது என்றே சொல்லலாம்! படத்துக்கு இசை இளையராஜா என்று போட்டிருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அப்படி ஒரு பாதிப்பு.

நாயகன் இளையராஜா குரலில் பாடுபவன் என்பதால், ராஜாவின் பாடல்கள் பின்னணி இசையாக ஒலிப்பதைக் கேட்கவே அத்தனை சுகமாக உள்ளது.

இந்தக் கதை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்... என்பதையெல்லாம் யோசிக்காமல், எந்த மனிதருக்கும் காதல் வரும்.. அதில் சோதனைகள் வரும். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் மனசில் பதியும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் தன் முதல் படத்தைத் தந்திருக்கும் ராஜூ முருகனை வாழ்த்தி வரவேற்போம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .