2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி மௌலவி இல்லை’

Nirosh   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் நௌபர் மௌலவி இருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அவர் அந்தத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,  ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைத்தாரிகள் பலரை புலனாய்வுத் துறையினரே வளர்த்திருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறினார்.

இந்தத் தாக்குதல்களின் தயாரிப்பு, இயக்கம், மத்தியக் கிழக்கு நாடான இஸ்ரேலாக இருக்குமெனச் சந்தேகம் தெரிவித்த அவர், சஹ்ரானின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அபுஹிந்த் என்கிற நபரும் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரி யாரென இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. நௌபர் மௌலவியே தாக்குதலின் பிரதான சூத்திராதியென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். இருப்பினும், நௌபர் மௌலவி பிரதான சூத்திரதாரியாக இருக்க முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு அமைவாக நௌபர் மௌலவியை விட பெரிய சூத்திரதாரி ஒருவர் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கிறார். அவர் யாரென இதுவரையில் அரசாங்கம் கண்டுப்பிடிக்கவில்லை” என்றார்.

சூத்திரதாரி தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நௌபர் மௌலவிதான் சூத்திரதாரியென அமைச்சர் கூறுகிறார். நாளையே அவர் இந்தக் கருத்தைத் திரும்பப் பெறலாம். இதற்கு முன்னரும், அவர் பல கருத்துக்களைத் திரும்பப் பெற்றிருக்கிறார்” என்றும், ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். 

நௌபர் மௌலவி இந்தத் தாக்குதலின் திரைக்குப் பின்னால் இருந்திருக்க வாய்பிருக்கின்ற போதிலும், பிரதான நடிகன் சஹ்ரானும் துணை நடிகர்களும், தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார்கள். கதாநாயகியான சாரா, காணாமல் போயுள்ளார். ஆனால், திரைப்படத்தின் தயாரிப்பும் இயக்கமும் யார் என்பது இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சஹ்ரான், இஸ்ரேலிய உலவாளியாக இருந்திருப்பதாக, ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் விசாரணைகளின் போது, புலனாய்வுத் துறையினர் பிரிந்து நின்று செயற்பட்டிருப்பதும் அறிக்கையினூடாக தெரியவந்துள்ளமை, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .