2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐ.தே.க மீது இராதா சீற்றம்

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சிறுபான்மை மக்களை அணைத்துக் கொண்டுசெல்வதில், பெரும் அக்கறை செலுத்திவந்தது. அதற்குக் காரணம், சிறுபான்மை மக்கள் அவர்களைவிட்டு சற்று விலகியிருந்ததே ஆகும். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறுபான்மை மக்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், அவர்கள் தொடர்பான விடயங்களில், அதிக கவனம் செலுத்துவதில்லை” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றஞ்சுமத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர், நேற்று (06) அனுப்பியிருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,  

“இன்று, ஐ.தே.கவில்
இருக்கின்ற ஒரு சில அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும், சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதில்லை.

“1994ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மலையகத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காகவே ஓர் அமைச்சை ஏற்படுத்தி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார். அதற்கு பிறகு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவும், தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்தில், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் என, பல்வேறு துறைகளையும் முன்னேற்றம் காண வழி சமைத்தார். 

“ஆனால், அவருடைய இரண்டாவது ஆட்சியின் போது, ஒரு கால கட்டத்தில் சிறுபான்மையினர் தொடர்பாக அக்கறை செலுத்தாமை காரணமாகவும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமை காரணமாகவும், தன்னுடைய ஆட்சியில் இருந்து கொண்டே தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பாடமாக கொண்டு செயற்படவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X