2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஓய்வு பெற்றாலும் தாய் நாட்டுக்காக சேவை செய்வேன்’

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எனது பதவிக்காலம் நிறைவடைந்து இன்று நான் ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறுகின்றேன்" எனத் தெரிவித்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன , 'எனது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும் தாய் நாட்டிற்கும்  அன்பார்ந்த மக்களுக்கும் தொடர்ச்சியாக நான் ஆற்ற வேண்டிய அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புகளையும் எதிர்காலத்திலும் தவறாது நிறைவேற்றுவதற்கு நான் உறுதியோடு இருக்கின்றேன்" எனவும் தெரிவித்தார். 

நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்று (16) ஆற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்னை வெற்றிபெறச்  செய்வதற்காக எனக்கு வாக்களித்த சுமார் 62 இலட்சம் மக்களுக்கும் அன்று போலவே இன்றும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

2015 ஜனவரி 08 ஆம் திகதி வெற்றிபெற்று 09ஆம் திகதி ஜனாதிபதியாகபதவியேற்றுக்கொண்டதன் பின்னர் சில தினங்களில் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் நாட்டு மக்களுக்கு நான் விசேட உரையொன்றினை ஆற்றினேன். 

அது உங்களுக்கு சிலவேளை ஞாபகம் இருக்கும். மீண்டுமொருமுறை ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என அப்போது நான் குறிப்பிட்டேன். 

அவ்வாறு குறிப்பிட்டதைப்போன்று  19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் எனக்கிருந்த அளவற்ற அதிகாரங்களை  நான்  நாடாளுமன்றம், அமைச்சரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றத்துக்கு கையளித்தேன். 

அத்தோடு நின்றுவிடாது மக்கள் என்னை 06 வருடங்களுக்காக தேர்ந்தெடுத்த போதிலும் அதையும் நான் 05 வருடமாக குறைத்துக்கொண்டேன். 

பெரும்பாலும் எமது நாட்டில் அதிகாரத்துக்கு வந்த அனைத்து அரச தலைவர்களும் சிலர் பழக்கமாகவும் சிலர் சம்பிரதாய மாகவும் தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே அரசியலமைப்பினை பயன்படுத்தினர். 

எனினும், நான் அளவற்ற நிறைவேற்று அதிகாரங்களை குறைத்தது மாத்திரமன்றி ஜனாதிபதியின் பதவிக்காலத்தையும் 05 வருடமாக குறைக்க முடிந்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். 

எனது பதவிக்காலத்தில் நாட்டில் பூரண ஜனநாயகத்தை உறுதிசெய்ய என்னால் முடிந்துள்ளது. முன்னொருபோதும் இல்லாத வகையில் பொதுமக்களின் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை மிக உயர்ந்த மட்டத்தில் நான் உறுதி செய்துள்ளேன் என நான் நம்புகின்றேன். 

அதன் பெறுபேறாகவே என்னால் பெற்றுக்கொடுக்கப்பட்ட அளவற்ற ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி என்மீதே அவதூறுகளையும் போலிப் பிரசாரங்களையும் சமூக ஊடகங்களின் வாயிலாக சிலர் முன்னெடுத்தனர். 

ஆயினும் அவற்றைக் கண்டு நான் ஒருபோதும் சளைக்கவில்லை. அதுவே எனது கொள்கையாகும். எனது பதவிக்காலத்தில் குறிப்பாக 1947ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிகாரத்துக்கு வந்த அனைத்து அரச தலைவர்களாலும் செய்ய முடியாது போன விடயத்தினை என்னால் செய்ய முடிந்துள்ளது. 

அதாவது அரச தலையீட்டுடன் எந்தவித கொலைகளோ, அரசியல் பழிவாங்கல்களோ, துன்புறுத்தல்களோ, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோ எதுவுமே எனது பதவிக்காலத்தில் இடம்பெறவில்லை. 

வேறு முறையில் கூறுவதாயின் அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ வேறு பகை காரணமாகவோ எவர் மீதும் அரச துப்பாக்கிகளின் தோட்டாக்கள் பாயவில்லை. 

எனது தேர்தல் பிரகடனத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவற்றை என்னால் நிறைவேற்ற முடிந்ததைப் போன்று நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவையை ஆற்றினேன் என்பதே எனது நம்பிக்கையாகும்.

ஆயினும் எனது அரசாங்கத்தில் அரச தரப்பினரிடையே காணப்பட்ட தனிப்பட்ட காரணங்களுக்கல்லாத, கொள்கை ரீதியான நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், காரணமாக அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அனைவரும் அறிந்ததே. 

இதனால் கடந்த 05 வருட காலத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மக்களுக்கும் நாட்டுக்கும் ஆற்ற  வேண்டிய மிக முக்கியமான சில பணிகளை செய்ய இயலாதும் போனது. அதற்கு அரசாங்கத்தில் நிலவிய சிக்கல் நிலைமையே காரணமாகும். 

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்களை நீங்கள் அறிவீர்கள். அவ்வாறு என்னால் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தவறான முறையில் பயன்படுத்தியவர்களும் இருக்கவே செய்கின்றனர். 

இவ்விடயம் தொடர்பில் கடந்த காலத்தை மீட்டிப்பார்ப்பதற்கு நான் இந்த சமயத்தில் விரும்பவில்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் நான் ஆட்சிக்கு வந்தபோது எமது நாட்டிற்கு காணப்பட்ட வெளிநாட்டு அழுத்தங்களை நீங்கள் அறிவீர்கள். 

2014ஆம் ஆண்டளவில் சர்வதேச மட்டத்தில் எமது நாடு இருந்த நிலைமையையும் தற்போது உள்ள நிலைமையையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இதனை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். 

அன்று காணப்பட்ட அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் காரணமாக நிலவிய சர்வதேச அழுத்தங்களை சுமார் 90 சதவீதமளவில் நான் நீக்கியுள்ளேன். 

சர்வதேச நீதிமன்றத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டுமென்பது பற்றியும் கதைத்தார்கள். அதேபோன்று நாட்டின் ஐக்கியம் தொடர்பிலும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஆயினும் அவை அனைத்திலிருந்தும் தற்போது நாம் மீண்டுள்ளோம். தற்போதும் எமக்கு சில சவால்கள் காணப்படுகின்றன. 

அவை வறுமையிலிருந்து மீட்சிபெறல், சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனைத்து இனங்களுக் கிடையேயும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல், மக்களிடையே சகோதரத்துவத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துதல், அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான பின்னணியை ஏற்படுத்துதல் போன்றவையாகும். 

நான் அதற்காக பெரிதும் முயற்சி செய்தேன்.  எனது அந்த முயற்சிக்கு சாதகமான பலன்களே கிடைத்துள்ளன.  இனங்களுக்கிடையே குறிப்பாக மொழி ரீதியில் காணப்படும் அச்சம், சந்தேகம், நம்பிக்கையின்மை ஆகியவற்றை இல்லாது செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 

நான் ஊழல், மோசடிக்கு எதிராக கடினமான அரசியல் தீர்மானங் களை மேற்கொண்டதை நீங்கள் அறிவீர்கள். எனது அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்களை கண்டறிவதற்காக நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நான் நியமித்தேன். 

இவ்வாறு தனது அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடியை கண்டறிவதற்கு ஆணைக்குழுவை நியமித்த ஒரேயொரு அரச தலைவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன் இவ்வாறு இடம்பெற்றதில்லை. 

அதேபோன்று ஊழல், மோசடி பற்றி குறிப்பிடும்போது மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழல் அதுவாகும். அதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசார ணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த நடவடிக்கைகள் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. அது மட்டுமன்றி, இதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்றினை மத்திய வங்கியில் மேற்கொள்ளவேண்டுமெனபரிந்துரைக்கப்பட்டது. 

அதனை எமது தேசிய கணக்காய்வு நிறுவனங்களால் மேற்கொள்ள முடியாது. என்பதனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டு தடயவியல் கணக்காய்வினை மேற்கொண்டு தற்போது 05 கணக்காய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

நீங்கள் வியப்படையும் பல விடயங்கள் அதில் காணப்படுகின்றன. அதிகாரத்திற்கு வரும் புதிய அரசாங்கம் அந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளை  நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்து மக்களுக்கு உண்மையை அறியத்தருவார்கள் என நான் நம்புகின்றேன்.

நாளைய தினம் புதிய ஜனாதிபதி ஒருவர் நாட்டுக்கு தெரிவு செய்யப்படுவார். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் ஊழல், மோசடியற்ற அமைச்சரவை ஒன்றினை நியமிப்பதே அவர் எதிர்கொள்ளும் முதலாவது சவாலாகுமென நான் நினைக்கின்றேன். 

பக்கச்சார்பற்ற  நடுநிலையான ஜனாதிபதி ஒருவரின் கீழ் 1947ஆம் ஆண்டின் பின்னர் இந்த நாட்டில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் இதுவாகும். 

வேட்புமனு கையளிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை கட்சி பேதமின்றி நடுநிலைக் கொள்கையுடன் எனது பொறுப்பில் உள்ள முப்படையினர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டில் மிகவும் அமைதியான தேர்தலொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதுபோன்ற அமைதியான தேர்தலை நடத்துவதற்கு நான் பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்பட்டமையே காரணமாகும் என்பதே எனது நம்பிக்கையாகும். 

இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த பிரதமர்களும் ஜனாதிபதிகளும் தேர்தல்களின்போது ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகித்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

அதனால், அரச அதிகாரங்கள் பெரும்பாலும் முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டன. அந்த வரலாறுகளை நீங்கள் அறிவீர்கள். அவை குறித்து இப்போது நான் கதைக்கப் போவதில்லை. 

இன்றைய சூழலில் அன்று 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கும் இன்று 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்குமிடையிலான வேறுபாடு என்ன? 

இலங்கை சமூகம் எவ்வளவு தூரம் முன்னோக்கி பயணித்துள்ளதென்பதை நீங்களே உணர்கின்றீர்கள்.  எவ்வாறாயினும் புதிய ஜனாதிபதிக்கு பலபொறுப்புக்கள் காணப்படுகின்றன.  

இலங்கை மக்களின் நலனுக்காகவும் பேண்தகு அபிவிருத்திக்காகவும் அதுபோன்று நான் பலப்படுத்திய ஜனநாயகத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவும் நான் பெற்றுக் கொடுத்த வரையறையற்ற ஊடக சுதந்திரத்தை மேலும் பலப்படுத்தவும் வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதியையே சார்ந்துள்ளது. 

எனது தலைமைத்துவத்தில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத்திட்டங்களில் போதைப்பொருள் ஒழிப்பு, தேசிய உணவுற்பத்தி, சிறுநீரக நோயினை கட்டுப்படுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்பேணல் நடவடிக்கைகள், கிராமசக்தி மக்கள் இயக்கம், சிறுவர்களை பாதுகாப்போம் போன்றவை முக்கியமானவையாகும். 
 
இந்த செயல்திட்டங்களை என்னால் முன்னெடுக்கப்பட்டதை விட புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் மேலும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டில் ஜனநாயகம், அபிவிருத்தி, சட்டம், ஒழுங்கு, ஐக்கியம் போன்ற விடயங்களில் இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படையினரும் பொலிஸ் திணைக்களமும் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் உயிர்த் தியாகத்துடன் மேற்கொண்ட அர்ப்பணிப்பும் அரச சேவையில் சம்பளம் பெறுபவர்கள் என்பதை தாண்டிய தாய் நாட்டிற்கான தியாகம் தொடர்பில் விசேட நன்றிகளை நான் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். 

அதேபோன்று அரச சேவையாளர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  எமது நாட்டின் வரலாறு, தொல்லியல் பின்னணி ஆகியவற்றை நினைவுகூருகையில் ஆங்கிலேயர்கள், சர்வாதிகாரிகள் எமது நாட்டை ஆட்சி செய்தபோது தேசிய விடுதலை போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய கெப்பட்டிபொல உள்ளிட்ட வீரர்கள் அன்று தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்டிருந்தனர். 

ஆயினும் எனது பதவிக்காலத்தில் அந்த விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களை தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்த முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். தாய் நாட்டிற்கான அந்த பணி வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதோடு அந்த பெரும் வீரர்களின் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

எனது அன்பிற்குரிய நாட்டு மக்களைப் போன்று பொலன்நறுவை மக்கள் தொடர்பாகவும் நான் இந்த தருணத்தில் குறிப்பிட வேண்டும்.

 எனது ஒட்டுமொத்த அரசியல் பயணமும் தீர்மானிக்கப்பட்டதும் அதற்கான அடித்தளம் இடப்பட்டதும் எனது வெற்றிக்கான பாரிய துணையாக இருந்தவர்களும் எனது அன்பிற்குரிய பொலன்நறுவை மக்களேயாவர். 

அந்த மண்ணே என்னை நாட்டிற்கு பெற்றுக் கொடுத்தது. எனது பதவிக்காலத்தில் நான் பொலன்நறுவை நகரத்திற்கு அதிகளவில் சேவையாற்றுகின்றேன் என்ற விமர்சனம் என்மீது சுமத்தப்பட்டது. 

ஆயினும் எனது அரசியலுக்கான அடித்தளம் இடப்பட்ட காலத்திலிருந்து நான் நாட்டின் தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை அதற்காக செயற்பட்ட எனது அன்பிற்குரிய பொலன்நறுவை மக்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எத்தனை சவால்கள் காணப்பட்ட போதிலும் எனது ஆட்சிக்காலத்தில் ஜனநாயக சமூக கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்காகவே நான் பாடுபட்டேன்.  இந்த நாட்டுக்கு பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும் நான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு பின்னணியாக அமைந்தது. 

சுதேச சிந்தனையுடன்கூடிய ஜனநாயக ஆட்சியே நாட்டிற்கு தேவையாகும். குறிப்பாக தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற என்னால் முடிந்தது. 

அவர்களது காணி விடுவிப்பு, சமூக நலன்பேணல், பௌதீக அபிவிருத்தி போன்ற பல விடயங்களை எம்மால் நிறைவேற்ற முடிந்தது. அவ்விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. 

அவர்களது தேவைகள் முற்றுமுழுதாக  நிறைவேற்றப்பட்டுள்ளதென நான் குறிப்பிடவில்லை. அவ்வாறு யாராலும் நிறைவேற்ற  முடியாது. ஆயினும் வடக்கு, கிழக்கு மக்களின் வேதனைகளை குறைப்பதற்காக யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை  நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றினை நியமித்து அதனூடாக அவர்களுக்கு சேவையாற்ற முடிந்தது. அவ்விடயத்தில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

ஜனாதிபதி என்ற வகையில் நான் மேற்கொண்ட சில தீர்மானங்கள் புதுமையானவை. வாளை வெளியில் எடுத்தேனே தவிர அதனை பாவிக்கவில்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். இல்லை. நான் அதை பாவித்தேன். எனது பிரதமரையே நான் நீக்கினேன். புதிய பிரதமர் ஒருவரை நியமித்தேன். நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக நாட்டு மக்களின் விமர்சனத்திற்குள்ளாகிய 05 வர்த்தமானி அறிக்கைகளை வெளியிட்டேன். 

போதைப்பொருள் போன்ற நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலக குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான கடுமையான  தீர்மானங்களை மேற்கொண்டேன். 

பொலிஸ் திணைக்களம் எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு 11 மாதங்கள் ஆகின்றன. பொலிஸ் திணைக்களத்தில் பல பிரச்சினைகள் காணப்பட்டன. பொலிஸாருக்கான சட்டங்களை நான் திருத்தினேன். புதிய சட்டங்களை இயற்றினேன். 

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகம், முகாமைத்துவம், வளப் பற்றாக்குறை ஆகியன நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான விடயங்களாகும் என்பதனால் 11 மாதத்திற்குள் பொலிஸ் திணைக்களத்தில் பாரிய மாற்றத்தை நான் ஏற்படுத்தினேன். 

சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம், ஐக்கியம், பௌதீக ஒருமைப்பாடு போன்ற விடயங்களின் முன் எமக்குள்ள சவால்களை கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே, பேர்கர் ஆகிய அனைவரதும் ஒற்றுமை மிக முக்கியமாகும். சர்வதேச ரீதியில் வெளிநாடுகளிலிருந்து ஏற்படும் சவால்களை கட்டுப்படுத்த இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது மிக முக்கியமாகும். 

எனது பதவிக்காலத்தில் முகங்கொடுக்க நேர்ந்த உங்களைப் போன்று நானும் மிகுந்த வேதனைக்குள்ளாகிய துன்பியல் சம்பவம் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற மிலேச் சத்தனமான பயங்கரவாத தாக்குதலாகும்.

அதில் உயிரிழந்த இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை நான் இந்த தருணத்தில் மிகுந்த துயரத்தோடு நினைவுகூருகின்றேன். 

அந்த சம்பவம் எம்மால் நிச்சயம் தவிர்த்திருக்கக்கூடிய சம்பவமாகுமென்பது தெளிவாகும். இவ்விடயம் தொடர்பில் இதைவிட வேறெதனையும் குறிப்பிட நான் விரும்பவில்லை. 

விசேடமாக தங்களது ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா என யாரும் என்னிடம் வினவினால் ஒரு கணமும் தாமதிக்காது ஆம் எனது பதவிக்காலம் தொடர்பில் நான் மிகுந்த திருப்தியடைகின்றேன். 

மகிழ்ச்சியடைகின்றேன் என்றே நான் குறிப்பிடுவேன். ஏனெனில் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான பல விடயங்களை நான் பெற்றுக்கொடுத்துள்ளேன். 

நான் பெற்றுக்கொடுத்த பல விடயங்கள் சட்டைப் பைகளுக்கு தெரிவதில்லை. உடம்பினால் உணர முடிவதில்லை. ஜனநாயகம், சுதந்திரம், ஊழலற்ற அரச நிர்வாகத்திற்கு பழக்கப்படுதல், ஆன்மீக சமூகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பினையும் கடமையையும் நிறைவேற்றுதல் போன்றவை அவற்றுள் அடங்குகின்றன. 

அத்துடன் எனது பதவிக்காலத்தில் உன்னத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப் படுத்தக் கிடைத்தமை இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் சகல பௌத்த பெருமக்களும் பெற்றுக்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். 
மேலும் எனது உரையாடலை நீடிக்க நான் விரும்பவில்லை. 

நான் எனது அரசியல் வாழ்க்கையை வெற்றிகரமாக தொடர்வதற்கு எனது நிழல்போல் என்னைத் தொடர்ந்த எனது அன்புக்குரிய மனைவி ஜயந்தி, அதேபோன்று எனது பிள்ளைகள் அனைவரும் நான் மிக கடினமான அரசியல் முடிவினை மேற்கொண்டபோது உதாரணமாக, 2014 நவம்பர் 21ஆம் திகதி மேற்கொண்ட தீர்மானம் போன்ற சந்தர்ப்பங்களிலும் அதற்கு முன்னரும் இன்றும் எனக்கு பக்கபலமாக இருப்பதையிட்டு அவர்களுக்கு விசேடமாக நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

கடந்த 05 வருட காலமாக ஜனாதிபதியாக பதவி வகித்த நான் விடைபெறும் இந்த சந்தர்ப்பத்தில் நாளைய தினம் புதிய ஜனாதிபதி ஒருவரை நீங்கள் உங்கள் வாக்குகளினால் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். 

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாளை பிறக்கவிருக்கும் பிள்ளைகளின் நன்மைக்காகவும் புதிய ஜனாதிபதிக்கு எனது ஆசிர்வாதங்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் அதேவேளை, அவர் மிகுந்த உறுதிப்பாட்டுடனும் தைரியத்துடனும் நேர்மையாக நாட்டிற்கான சேவைகளை நிறைவேற்ற கிடைக்கவேண்டுமென பிரார்த்திக்கின்றேன். 

எனது பதவிக்காலம் நிறைவடைந்து இன்று நான் ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறுகின்றேன்.  எனது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும் தாய் நாட்டிற்கும் எனது அன்பார்ந்த மக்களுக்கும் தொடர்ச்சியாக நான் ஆற்ற வேண்டிய அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புகளையும் எதிர்காலத்திலும் தவறாது நிறைவேற்றுவதற்கு நான் உறுதியோடு இருக்கின்றேன். 

நேர்மையே பலமாக அமைய வேண்டும். சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பலப்படுத்தப்பட வேண்டும். 

ஜனநாயக சமூகத்தில் சுபீட்சமான பொருளாதாரத்துடன் நமது தாய் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, எமது நாட்டை உலகில் மிகச் சிறந்த முன்னேற்றகரமான தேசமாக கட்டியெழுப்புவதற்காக உங்களுடன் நான் எதிர்காலத்திலும் இணைந்துகொள்வேன்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .