2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சமூக ஒற்றுமைக்கு நிரந்தரக் கட்டமைப்பு அவசியம்’

Editorial   / 2017 மே 31 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் மற்றும் சிங்களச் சகோதரர்கள், இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று, அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில், நமது பண்பான செயற்பாடுகள் பெரிதும் அமைய வேண்டும். அதற்கு நிரந்தரமான, நிலையான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம், நம்முன்னே எழுந்து நிற்கின்றதென, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். 

முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினை, சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பாக, குருநாகல் - கண்டி றிச் ஹோட்டலில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் குருநாகல் கிளை ஏற்பாடு செய்த கருத்தரங்கில், அமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். 

அவர் அங்கு கூறியதாவது, 

“உலமா சபையும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை நல்கியவர்கள். பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். நமது சமூகம் படுகின்ற வேதனைகள், துன்ப துயரங்கள், அழிவு மற்றும் நட்டங்களில் இருந்து, அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, இந்த இரு சாராருக்கும் பெருமளவில் இருக்கின்றது. அதே போன்று, நல்லாட்சி அரசிடம் சமூகத்தைப் பாதுகாக்குமாறு கோருவதற்கும் எங்களுக்கு அத்தனை உரிமைகளும் இருக்கின்றன. 

“எனவே தான், தற்போது ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உலமாக்களும் அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு, இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம். அரசியலுக்கப்பால், இயக்க வேறுபாடுகளுக்கப்பால் கருத்து முரண்பாடுகளை மறந்து, விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியது நமது தலையாய கடமையாக இருக்கின்றது. 

“இந்த மாவட்டத்திலே, 24 உலமா சபைக் கிளைகளும் 34 பொலிஸ் நிலையங்களும், 167 கிராமங்களும், 30 பிரதேச செயலகங்களும் இருக்கின்றன. எனவே, 24 மையங்களில் இதன் பொறுப்புக்கள் ஒருமுகப்பட்டு செயற்படுத்தப்பட்டால், பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்கலாம். இதற்கு, எனது பங்களிப்பு முழுமையாக இருக்கும்.  

“இவ்வாறான ஒரு இக்கட்டான கால கட்டத்தில், முஸ்லிம்களாகிய நாம், நமக்குள் இருக்கும் சிறு சிறு முரண்பாடுகள் மற்றும் மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள சிற்சில வேறுபாடுகளைப் பெரிதாக்கிக் கொள்ளாமல், அவைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறான பிரச்சினைகள், இந்தச் சந்தர்ப்பத்தில் எழுந்தால், மாற்றுச் சமூகத்தவர்கள், இதனால்தான் முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதென்று கூறுவதற்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். பொலிஸாரும் அந்த கோணத்திலேயேதான் பிரச்சினைக்கான தீர்வைத் தேடிக்கொண்டிருப்பர். இது, நமக்கு ஆபத்தாகவே முடிந்துவிடும் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். 

“அரசாங்கம், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்றது. அதனை நாம் இன்னும் நம்புகின்றோம். முஸ்லிம் சமூகம் பொறுமையை கடைப்பிடிப்பதுடன் எதிர்வினைகளுக்கு ஆட்படாமல் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம், பிரச்சினைக்கு முடிவு கட்டலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .