2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘ஜனாதிபதி ஏமாற்றி விட்டார்’

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 19 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதாக அழைத்து ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாக” அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

இன்று (19) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸார், போராட்டக்கார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றனர்.

அது தொடர்பில் அருட்தந்தை தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து பொலிஸார் எங்களில் மூவரை அழைத்து சென்றனர். நாங்கள் சந்திக்க வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு பொலிஸார் எழுத்து மூலமாக அறிவித்து இருந்தனர். ஆனால் நிகழ்வின் இறுதிவரையில் எங்களை சந்திக்கவில்லை. 

இங்கே நாங்கள் காணாமல் போனோர் விடயமாக போராடிக்கொண்டு இருக்கின்றோம். அருட்தந்தை ஜிம்ரான், அருட்தந்தை பிரான்சிஸ் இந்த கல்லூரியின் அதிபராக இருந்துள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சரோ, எதிர்க்கட்சி தலைவரோ, கல்லூரி நிர்வாகமோ ஜனாதிபதி முன்னிலையில் அது தொடர்பில் பேசவில்லை.

ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என அரசியல் தலைவர்கள் கல்லூரி நிர்வாகம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால் யாரும் அது தொடர்பில் பேசவில்லை.

இந்த கூட்டத்தின் இறுதிவரையில் ஜனாதிபதி எங்களை சந்திப்பார் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் இறுதிவரை எங்களை அவர் அழைத்து சந்திக்கவில்லை.

நிகழ்வு முடிந்து வரும் வழியில் நடந்து செல்லும் போது வெளியில் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது என கூறப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எங்களை அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம். எங்கள் மூவரை அழைத்து அவமானப்படுத்தியதாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .