2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஞானசாரரைக் கைது செய்ய தயக்கம் காட்டுவது ஏன்?’

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக் கேவலப்படுத்தி வரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கு அரசாங்கம், தயக்கம் காட்டுவது ஏன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவியுள்ளார்.

 இந்த விவகாரம் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக நிந்திக்கும் ஞானசார தேரர், கடந்த 19 ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். அப்போதும், அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தது. எனினும், அவரைக் கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.  

இந்நிலையில், குருநாகல் பகுதியில் வைத்து, கடந்த 20 ஆம் திகதி இரவு, அவரைக் கைது செய்யவதாக பொலிஸார், நாடகம் காட்டியுள்ளனர்.   

முஸ்லிம்களுக்கு எதிரான ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி இருப்பதை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் காட்டமாக தெரிவித்திருந்ததுடன் அவரைக் கைது செய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தோம்.   

இதுவரை அது நடக்கவில்லை. ஆனால், அவரைக் கைது செய்வது போன்ற திட்டமிட்ட நாடகம் ஒன்றுதான் அரங்கேற்றப்பட்டுள்ளது. சட்டத்தைக் கையிலெடுத்து ஆடும் இந்தத் தேரரை அரசாங்கம் அடக்குவதற்கு ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை.  

சிறுபான்மையின மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தி எந்தவிதப் பயமும் இல்லாமல் அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.   

மத்துகமை, தர்ஹா நகர் ஊடாக ஊர்வலம் சென்ற, பொது பல சேனா இயக்கத்துக்கு, அளுத்கம பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். பொலிஸாரின் கபடத்தனம் இந்தச் செயலில் இருந்து, குருநாகலில் நடத்தியது நாடகம் என்பது மட்டும் நன்கு புரிகின்றது.   

ஞானசார தேரரையும் அவரது இயக்கத்தையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு பொலிஸார் தமது பணிகளை முன்னெடுக்கின்றனரே ஒழிய முஸ்லிம்களின் அச்சத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.  

புனித ரமழான் நெருங்க நெருங்க முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. கடந்த வாரம் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  

மல்லவப்பிட்டியில் பள்ளிவாசலின் மீது, கடந்த 20 ஆம் திகதி இரவு பெற்றோல் குண்டுகளை வீசி சேதப்படுத்தியுள்ளனர். எல்பிட்டியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபாரத்தளமொன்று இன்று (21) காலை (நேற்று) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  

சட்டமும் ஒழுங்கும் செத்துக்கிடப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம். எனவே, இனவாதத்தின் ஊற்றுக்கண்ணான ஞானசாரதேரரை உடன் கைது செய்ய வேண்டுமென இந்த அரசின் பங்காளிக் கட்சியென்ற வகையிலும் அமைச்சர் என்ற வகையிலும் பொறுப்புடன் கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X