2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'தேசிய பாதுகாப்பு விடயத்தில் கைதானோருக்கு இலங்கையில் இன்றும் சித்திரவதை’

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்புக் காரணங்களைக் கூறித் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக, இலங்கையால் இன்னமும் சித்திரவதை பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் நோக்கில், இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே, இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் கருத்துத் தெரிவித்த பென் எமர்ஸன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை, ஆழமான தவறுகளைக் கொண்டது என வர்ணித்ததுடன், அதன் கீழ் கைதுசெய்யப்படுவோர் மீதான சித்திரவதை என்பது, "வழக்கமானதாகவும் அதிகளவிலும்" காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

"சட்டம், தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அரசின் மெருகூட்டப்பட்ட சித்திரவதைக் கருவியின் கடுமையான பாதிப்பை, அச்சமூகம் எதிர்கொண்டுள்ளது.

"பாதுகாப்புத் துறையில், சித்திரவதை என்பது ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. கொடூரமான சித்திரவதை தொடர்பில், வருந்தத்தக்க, நேரடியான அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

"தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல், பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பலமணிநேரங்களுக்குத் தொங்கவிடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காண்பதாக அவர் குறிப்பிட்டார்.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பென் எமர்ஸன், மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது என ஏற்றுக் கொண்ட அவர், எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாழ அதே இடத்திலேயே நிற்பதாகக் குறிப்பிட்டார். நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அர்ப்பணிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரினார்.

தனது விஜயம் தொடர்பாகவும் அதில் தான் கண்டறிந்த விடயங்கள் தொடர்பாகவும், முழுமையான அறிக்கையொன்றை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் சமர்ப்பிப்பார் என, அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .