2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’நான் இறக்கும் முன்னர் சோறு ஊட்ட வேண்டும்’

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
“நான், இறப்பதற்கு முன்பு எனது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு எனது கையால் சோறு ஊட்ட வேண்டும். இதுதான் தான் எனது கடைசி ஆசையாகும்” என, காணாமலாக்கப்பட்ட தனது உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்டுவரும், தாயொருவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள, ஒட்டுசுட்டான் கற்சிலை மடு கிராமத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் சரஸ்வதி என்ற வயோதிபத் தாயாரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.   

அவர்,தனது இரண்டு மகன்மார்களையும் மற்றும் மகளின் கணவனையும் தொலைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

எனக்கு, 04, பெண் பிள்ளைகளும் 02, ஆண் பிள்ளைகளுமாக 06, பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். எனினும், கடந்த 1990, ஆம் ஆண்டு மூத்த மகன் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பில் பல இடங்களிலும் தேடி அலைந்த நிலையில், மற்றைய மகன் பரராஜசிங்கம் சிவபாலன் 2002, ஆம் ஆண்டு வவுனியா நகரப் பகுதியில் பொருட்களை வாங்கி வருவதற்காக சென்றிருந்த நிலையில் அவரை வவுனியாவில் வைத்து இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.  
இது தொடர்பில், அவருடன் கூடச் சென்றவர்கள் எனது மகனான சிவபாலனை இராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறினர். அதனையடுத்து, நானும், கணவரும் வவுனியாவுக்குச் சென்று பொலிஸ் நிலையத்திலும் மற்றும் இராணுவ முகாம்களிலும் விசாரித்த போதும் தாங்கள் இந்தப் பெயரில் யாரையும் பிடிக்கவில்லை என்று கையை விரித்து விட்டனர்.  

இதனால் மனமுடைந்த கணவர், பிள்ளைகளை நினைத்து நினைத்து ஏங்கிய நிலையில் உயிரை மாய்த்துக் கொண்டார்.  

இவ்வாறான நிலையில் வன்னியில் இடம் பெற்ற கடைசிச் சண்டையின் போது, எனது மகள் குடும்பத்தினர், கற்சிலை மடுவில் இருந்து இடம் பெயர்ந்து தேவிபுரம் பகுதிக்கு சென்றனர். செல்லும் வழியில் எனது மருமகனும் காணாமல் போயுள்ளார். மூன்று பேரையும் பறிகொடுத்து விட்டு இன்று தனி மரமாக இருந்து இவர்களைத் தேடி அலைந்து வருகின்றேன்.  

மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பல அமைப்புகளிடம் முறையிட்டுள்ள நிலையில் எவரும் எனக்கு எனது பிள்ளைகளை மீட்டுத் தரவில்லை.  எனது பிள்ளைகள் பற்றிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .