2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாமலில் கைவிரல் அடையாளம் பெறப்பட்டது

Thipaan   / 2017 ஜூன் 07 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உட்பட அறுவருக்கு எதிரான வழக்கில், நாமல் எம்.பி உட்பட பிரதிவாதிகள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, நேற்று (06) அதிகுற்றப் பத்திரம் கையளிக்கப்பட்டது. இதே​வேளை அந்த மூவரின் கைவிரல் அடையாளங்களும் பெற்று​க்கொள்ளப்பட்டன.  

நாமல் எம்.பிக்குச் சொந்தமான கவர் கோப்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்று, 30 மில்லியன் ரூபாய் பணச்சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

நாமல் ராஜபக்‌ஷ, இந்திக கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, சேனானி சமரநாயக்க ஆகிய ஐவருக்கு எதிராகவும் கவர் கோப்ஸ் நிறுவனத்துக்கு எதிராகவுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் எம்.பி உட்பட பிரதிவாதிகள் மூவருக்கு 11 குற்றச்சாட்டுகளைக் கொண்ட அதிகுற்றப்பத்தரம் கையளிக்கப்பட்டது.  

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே, 30 மில்லியன் ரூபாய் பணச்சலவை செய்யப்பட்டுள்ளது என, அதிகுற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த வழக்கின் இரண்டு பிரதிவாதிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நாமல் எம்.பி உட்பட மூவர் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், அவர்களுடைய கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.   நேற்று ஆஜரான மூவரையும் முன்பிணையின் அடிப்படையில் விடுவிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி கிஹான் குலதுங்க, வழக்கை இம்மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்தவைத்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .