2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’மஹிந்தவுக்கு நன்றி கூற வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

நல்லாட்சி அரசாங்கம் ஊடகச் சுதந்திரத்தைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா, ஊடகவியாலளர் கீத் நொயார் உயிருடன் விடுவிக்கப்பட்மைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நன்றியும் தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்துக்கு 3 வருடங்கள் பூர்த்தியாகவிருக்கும் தருணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறந்தா அல்லது மஹிந்த ஆட்சியின் செயற்பாடுகள் சிறந்ததா? என மதிப்பீடு செய்வது அவசியமாகும்.

அந்தவகையில், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஊடகச் சுதந்திரம் பலப்படுத்தபட்டுள்ளது, நீதித்துறை மற்றும் அரச சேவை ஆணைக்குழு என்பவை சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“தகவல் அறியும் சட்டம், அடிப்படை உரிமைச் சட்டங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆட்சியில் இதற்கு மாறான சம்பவங்களே இடம்பெற்றன. குறிப்பாக லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் மற்றும் உபாலி தென்னகோன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கீத் நொயார் மீதான சித்திரவதை குறித்து அறிந்த சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அறிவித்து அவ​ரைக் காப்பாறினார். கீத் நொயார் உயிருடன் விடுவிக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இருப்பினும், அவரின் காலத்திலேயே ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் அதிகமாகக் காணப்பட்டன” எனவும் குறிப்பிட்டார்.

​அத்துடன், “தேசிய கணக்காய்வுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமையின் காரணமாக அரச நிதி கையாளுகை செயற்பாடுகளும் சரிவர முன்னெடுக்கப்படுகின்றன. மறுமுனையில் அரச சேவைகளும் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

மேலும், “ஆர்ப்பாட்டங்களில் இன்று ஈடுபடுகின்றவர்களை அரசாங்கம் சுட்டுக்கொல்வதில்லை. அவ்வாறு சுட்டுக்கொள்ளபடுவார்களாயின் அது அரசாங்கத்தின் பலவீனத்தையே பிரதிபலிக்கும். அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்துக்கு முரணாகச் செயற்படாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .