2024 மார்ச் 28, வியாழக்கிழமை

100ஆ​வது நாள் அதிர்ந்தது; ஏ-9 வீதியும் தடைப்பட்டது

Editorial   / 2017 மே 31 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினால் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (30) 100ஆவது நாளை எட்டியது. 

இந்நிலையில், நேற்றுக் காலை 10:30 மணியளவில், சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,

பின்னர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னதாகவுள்ள ஏ-9 வீதியின் இரு வழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால், ஏ9 வீதியின் போக்குவரத்து, பல மணிநேரமாக முற்றாக ஸ்தம்பித்துள்ளது. பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை சரிசெய்வதற்கு பொலிஸாரும் பாதுகாப்பு பிரிவினரும் கடும் பிராயத்தனத்தில் ஈடுபட்டனர். கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.  

இதே​வேளை, காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்றும் இதனால், இன்றைய இப்போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பொலிஸாரால், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், நேற்றைய தினம் (29), மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதவான் நீதிமன்றம், அதனை நிராகரித்திருந்தது. 

இந்நிலையில், கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் சர்வமதப் பிரார்த்தனை ஒன்று இன்றைய தினம் (நேற்று) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில், யோகராசா கலாஞ்சினி மற்றும் சண்முகம்பிள்ளை சறோயினி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உங்களால் கிளிநொச்சி நகரில் உள்ள அமைப்பொன்றின் சார்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் அறிக்கையிட்டு உள்ளனர்  

ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அரசியல் அமைப்பில் தங்களுக்கு உள்ள உரிமையினை நீதிமன்றம் மதிக்கிறது. அதேவேளையில், தங்களுடைய ஆர்ப்பாட்டத்தினால் போது ஒழுங்கிற்கும் பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அறிவுறுத்தப்படுகின்றீர்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 இந்நிலையில், போராட்டத்தால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணி, போராட்டக்காரர்கள் கூடியுள்ள பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களிலும், பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

“எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியே நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். எந்தவித பதில்களும் கிடைக்கவில்லை இந்நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம். இப்போராட்டம், இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. எங்களுக்கான எந்த ஒரு தீர்வுகளும் வழங்காது எங்களது போராட்டங்களை தொடர்ந்து நீடிக்க விட்டு, நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்க்கின்றன” என்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.   ஏ-9 வீதி முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி நீதவான், மாவட்ட மேலதிகச் செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், போராட்டக்காரர்களுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை, மாவட்ட மேலதிகச் செயலாளரிடம் கையளிக்குமாறு, நீதவான் தெரிவித்தார்.  

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மனுக் கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி,
உரி​ய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மேலதிகச் செயலாளர், போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.  

இந்நிலையில் ஸ்தலத்துக்கு விரைந்த, கிளிநொச்சி மாவட்ட செயலர் எஸ்.சத்தியசீலன், ‘ஜனாதிபதி செயலகத்தால் வடமாகாண ஆளுநர் ஊடாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதில், ‘காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக 2 வாரங்கள் அவகாசம் தேவையாகவுள்ளது. அத்துடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்’ என தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு வாரங்கள் அமைதி காக்கவும்’ என கோரிக்கை விடுத்தார். 

இதற்கமைய ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை விட்டு விலகி கந்தசாமி ஆலய முன்றலில் வழமையாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்கின்றனர். 

 கிளிநொச்சி மாவட்ட செயலர் எஸ்.சத்தியசீலன், ‘ஜனாதிபதி செயலகத்தால் வடமாகாண ஆளுநர் ஊடாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதில், ‘காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக 2 வாரங்கள் அவகாசம் தேவையாகவுள்ளது. அத்துடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்’ என தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு வாரங்கள் அமைதி காக்கவும்’ என கோரிக்கை விடுத்தார். 

இதற்கமைய ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை விட்டு விலகி கந்தசாமி ஆலய முன்றலில் வழமையாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X