2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுத்தம் முடிந்தபோதிலும் பல கேள்விகள் எஞ்சியிருக்கின்றன: ஜோன் ஹோம்ஸ்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருப்பதாக பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான  ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் சற்றுமுன் நடைபெற்ற பிரியாவிடை செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி  எனும் தனது பதவிக் காலத்தின்போது  இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா.  முகம்கொடுத்ததாக ஜோன் ஹோம்ஸ் கூறினார். எனினும் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை ஐ.நா. வகித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு ஜோன்ஸ் ஹோம்ஸ் பதிலளிக்கையில், யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முயற்சிக்கையில் அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரச்சாரங்களை சமநிலைப்படுத்த முயற்சித்தபோது ஐ.நா. கடும் அழுத்தங்களுக்கு உட்பட்டதாகக் கூறினார்.

'யுத்தத்தின்பின் எதிர்பார்க்கப்பட்ட மிகமோசமான விடயம் இடம்பெறவில்லை. இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானோர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தத்தில், இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமானப் பணியில் தவறுகளைவிட அதிக சரியானவற்றை செய்ய முடிந்தது' எனவும் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

எனினும், பொதுமக்களின் சேதங்கள் உட்பட பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருக்கின்றன என அவர் கூறினார். யுத்தத்தின்பொது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று என அவர் கூறினார்.

மூதூரில் ஏ.சி.எவ். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • tharmin Friday, 27 August 2010 03:01 PM

    unnmaikku eappoo oru naal pathil kidaikkum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .