2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கம் - சென்னை தடா நீதிமன்றம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முதலாம் சந்தேகநபரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இந்தியா முதன் முதலான உத்தியோகபூரவமாக அங்கீகரித்துள்ளது.

இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (சீபீஐ) அறிக்கையின் அடிப்படையில், பிரபாகரனின் மரணம் உறுதிசெய்யப்பட்டு விட்டதால் தடா வழக்குக்கான சென்னை விஷேட நீதிமன்றம் அவருக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் கைவிட்டுள்ளது.

முதலாம் சந்தேகநபரான பிரபாகரன், இரண்டாம் சந்தேக நபரான பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கு கைவிடப்படுவதாகவும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தடா நீதிமன்ற நீதிபதி கே.தட்சினாமூர்த்தி தெரிவித்துள்ளார். 

 

இந்திய சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துப் போயின் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தன் பாட்டிலேயே அற்றுப்போகும். கடந்த 2009அம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடியும் தருவாயில் பிரபாகரன் சண்டையில் இறந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

பிரபாகரன் உயிரிழந்ததான அவரின் சடலத்தின் படங்கள் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட போது இலங்கை அரசாங்கம் பிரபாகரனின் மரணத்தை சட்ட வலுவானதாக்கும் மரண அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கவில்லை.

பொட்டு அம்மான் தொடர்பில் இலங்கை அரசு படத்தைக் கூட காண்பிக்கவில்லை. இதனால் இவ்விருவரும் உயிரோடு இருப்பதாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் வதந்திகள் பரவின.

இருப்பினும் 1989ஆம் ஆண்டு மிதவாக தமிழ் அரசியல்வாதியான அ.அமிர்தலிங்கத்தின் கொலை வழக்கு கடந்த வருடம் விசாரணைக்கு வந்த போது இலங்கை பொலிஸார், பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக அறிவித்திருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படுத்துகையை அடிப்படையாகக் கொண்டு ராஜீவ் காந்தியின் படுகொலையை விளக்கமாக ஆராய சீபீஐ.யினால் அமைக்கப்பட்ட விஷேட புலனாய்வுக் குழு, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் இறந்துவிட்டமையினால் ராஜீவ் காந்தி கொலை வழக்கினைக் கைவிடலாம் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .