2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விவகாரத்தில் மக்கள் கண்காணிப்புக் குழு அக்கறை செலுத்தும்'

Super User   / 2010 நவம்பர் 02 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு விளகமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதியான குணரட்ணம் மனோகரன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்நிலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி கைதிகள் விவகாரத்தில் மக்கள் கண்காணிப்புக் குழு உடனடி அக்கறை செலுத்த போவதாக குழுவின் ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு விஸ்வமடுவை வசிப்பிடமாக கொண்டுள்ள இந்த கைதி விளகமறியல் சிறைச்சாலையின் ஜிஐ பிரிவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் நிர்கதி நிலைமையை முன்நிறுத்தியே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஏனைய தமிழ் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருப்பதாக தீர்மானித்துள்ளனர்.

நீண்டகாலமாக விசாரணைகளின்றியும், அரைகுறை விசாரணைகளுடனும் தமிழ் கைதிகள் கொழும்பு, கண்டி, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், பதுளை ஆகிய சிறைச்சாலைகளிலும், பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, மலையகத்தை சார்ந்த இந்த கைதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களுக்கு மன்னிப்பு அல்லது பிணை அல்லது துரித கெதியிலான விசாரணைகள் நடத்துவற்கு விசேட நீதிமன்றம் அல்லது புனருத்தாபனம் ஆகிய ஏதாவதொரு நிவாரணத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கைவிடுத்தபோதும் நடைமுறையில் பயனேதும் ஏற்படவில்லை.

நீதி, சட்ட மறு சீரமைப்பு துறையை தொடர்ச்சியாக பொறுப்பேற்கும் அமைச்சர்கள் இக்கைதிகளுக்கு வழங்கி வந்துள்ள உத்தரவாதங்கள் தொடர்ச்சியாக பொய்த்து வந்துள்ளன.

விடுதலை புலிகளின் நேரடி அங்கத்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு தனது அரசியல்  நோக்கங்களுக்கு இணங்க அரசாங்கம் வழங்குகின்ற அங்கீகாரம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை எம மனோ கனேசன் வெளியீட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .