2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜோர்தானில் இலங்கை பணிப்பெண்ணின் உடலில் ஆணி; விசாரணைகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோர்தானில் பணிபுரிந்து வரும் இலங்கை பணிப்பெண்ணொருவருக்கு ஆணி ஏற்றப்பட்டதான குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணை நடத்திகொண்டிருக்கின்றது.

டி.எம்.சந்திமா என்ற பணிப்பெண், தனது வீட்டுக்காரர் பலவந்தமாக ஆறு ஆணிகளை விழுங்க வைத்ததாக ஜோர்தான், அமானில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

இது தொடர்பில் வைத்தியர்களின் முழுமையானதொரு அறிக்கையை எதிர்ப்பார்த்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், மருத்துவ சாட்சியங்களை அடுத்து இச்சம்பவத்துக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை பணிப்பெண்ணுக்கு ஆணி ஏற்றப்பட்ட இச்சம்பவம் கடந்த மூன்று மாதங்களுக்குள் மூன்றாவது சம்பவமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண்ணொருவரின் உடலிலிருந்து 14 ஆணிகள் அகற்றப்பட்டன. லட்சுமி (வயது 38) என்ற இந்தப் பணிப்பெண்ணின் உடலில் அவரது எஜமானார் ஆணிகளை ஏற்றியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தான் வேலையை சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கிணங்கவே தன் மீது இந்த ஆணிகள் ஏற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாடு திரும்பிய அவருக்கு குருநாகல் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அவரின் உடலிலிருந்து ஆணிகள் வெளியேற்றப்பட்டதாக மேற்படி வைத்தியசாலையின் பணிப்பாளர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

குறித்த பெண், அவரது எஜமானாரிடம் அவருக்கான சம்பளத்தைக் கோரியதனால், அவரது கைகளிலும் இடது காலிலும் 3.5 சென்றிமீற்றர் நீளமான ஆணிகள் ஏற்றப்பட்டதாக மேற்படி வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த ஒகஸ்ட் மாதமளவில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த மற்றுமொரு இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் உடலிலிருந்த 24 ஆணிகள் அகற்றப்பட்டிருந்தன.

குறித்த பணிப்பெண் வேலை பார்த்த வீட்டின் எஜமானார்களினால் அவருக்கான தண்டனையாகவே மேற்படி ஆணிகள் ஏற்றப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்தப் பணிப்பெண்ணின் கைகள், கால்கள், நெற்றி ஆகிய உடலுறுப்புகளிலேயே இந்த ஆணிகள் ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சவூதி அரசாங்கமும் றியாத்திலுள்ள தனியார்துறை அதிகாரிகளும் மேற்படி பெண்ணின் முறைப்பாட்டின் உண்மைத் தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பக்களைப் பெற்று அங்கு பணிபுரிந்து வரம் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பலவேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் அறிக்கையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .