2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அபிவிருத்தியை நோக்கி மனிதாபிமான பயணம்;பதவியேற்ற பின் ஜனாதிபதி உரை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 19 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நாடு அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த பயணம் ஜாதி, மதம் மற்றும் அரசியல் பேதங்களின்றிய மனிதாபிமானப் பயணமாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தெரிவித்தார்.

ஜனநாயக சோசலிஷ குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக இன்று அவர் பதவியேற்றதை அடுத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தம் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது :-

"இலங்கைத் திருநாட்டை அதிசிறந்ததொரு நாடாக உருவாக்கும் மாபெரும் பொறுப்பை இலங்கை ஜனநாயக குடியரசின் மக்களான நீங்கள் என்னிடம் கையளித்துள்ளீர்கள். நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எனக்குள்ளது.  முதலாவது முறை நான் பதவியேற்கும் போது நாடு இரண்டுபட்டிருந்தது. ஆனால் கடந்த வருடம் நாம் இந்த நாட்டை ஐக்கியப் படுத்தினோம்.

இந்நிலையில் நமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்ல வேண்டிய வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் இன்று முதல் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை முன்னெடுத்து இந்த நாட்டை சிறந்த நாடாக கட்டியெழுப்புவோம். மன உறுதியுடன் நாம் இந்த நாட்டை இன்று பொறுப்பேற்கிறோம்.

கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடி யது. ஆனால் இனி அவ்வாறானதொரு நிலைமை உருவாகாது. அப்படி உருவாகவும் நாம் இடமளியோம்.

இன்று கிராமங்களில் புதிய ஒளி பிறந்துள்ளது. பல கிராமங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. இந்நிலையில் மேலும் பல  கிராமங்களை அபிவிருத்தியடைந்த வலயங்களாக உருவாக்குவோம். தாய் நாட்டின் அபிவிருத்திக்கான தேசிய கதவு திறக்கப்பட்டுள்ளது. ஒரு துளி இரத்தம் கூட கடலில் கலக்க விடாது நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்துவோம். நாட்டுக்காக தியாகத்துடன் வேலை செய்யும், அனைவருக்கும் கௌரவமானதொரு சூழலை உருவாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

எமது இளைஞர்கள் நாட்டின் எதிர்கால சொத்துக்களாவர். அவர்களின் பலம் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்நிலையில் 3 மொழிகளையும் அறிந்த எதிர்கால பிரஜைகளாக அவர்களை உருவாக்க வேண்டும். இலங்கையின் எதிர்கால பிரஜைகள் சர்வதேசத்தில் முதலிடம் பெறவேண்டும்.

பஞ்சமகா கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் ஜாதி மத பேதங்கள் மட்டுமன்றி அரசியல் பேதங்களும் மறைந்து விட வேண்டும். அபிவிருத்தி இல்லாத இடத்தில் சமாதானம் இல்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு நாடுகளும் எமக்கு உதவி வழங்கின. அதேபோன்று அபிவிருத்திக்காகவும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. அதனால் சர்வதேச நாடுகளும் முன்னெடுத்த ஒப்பந்தங்களை அபிவிருத்தி நோக்கிக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள், யுத்தம், போதைப்பொருள், ஆயுதங்கள், ஊழல் மோசடிகள் அற்ற நாடே எமக்கு வேண்டும்.

நான் ஓய்வு பெற்றதன் பின்னர்  இந்த நாட்டின் பிரஜையொருவர் 'நீங்கள் இந்த நாட்டுக்காக செய்ய வெண்டிய பொறுப்பக்களை ஒழுங்காக செய்துள்ளீர்கள்' என்று கூறினால் அதுவே எனது வெற்றியும் நான் செய்த வேலைகளுக்குமான திருப்தியுமாகும்.

இந்நிலையில் நாம் அபிவிருத்தியை நோக்கி மனிதாபிமான உணர்வுடனயே பயணிக்க வேண்டும். எமது தாய் நாடு இலங்கை. அதனை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. நாம் எல்லோரும் இலங்கையர்கள். இங்கு எல்லோருக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும். அதுதான் எமது தேவை.

பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று விடுவிக்கப்பட்டு அங்கு வரலாற்றில் இல்லாத பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வடக்கில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றன. மேலும் பல வளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எமது இலங்கை ஒரு சிறிய நாடு என்று எவ்வாறு கூறமுடியும்?

முயற்சியுடையான் இகழ்ச்சியடையான். இந்தக் கூற்றுக்கமைய தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்ல எதிர்காலத்துக்காக அனைவரும் எம்முடன் எழுந்து வர வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும்  நல்லதொரு எதிர்காலம் உருவாக பிரார்த்தித்துக்கொள்கிறேன்." (M.M)


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 19 November 2010 08:48 PM

    வாழ்த்துகள்!
    உங்களது 2-ம் பதவி ஏற்பு நன்மையாக அமைந்ததேபோல் உங்களது கனவுகளும் நனவாக விளைகின்றேன்!
    இந்தியாவை சமாளித்து சீனாவையும் சேர்த்துக்கொண்டு நாட்டை வளப்படுத்த இயலுமென்பது சாதனையே, ஹம்பன்தொடவுக்கு அருகில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து போனாலே போதும் நீங்கள் சாதனை புரிந்ததாகவே ஆகும்.
    ஊழலையும் விரயத்தையும் முறியடிப்பதொன்றே உங்கள் பணியாக இருக்கும்.
    அமெ. கப்பல்கள் அதன்பின் வராதிருக்கப் போகின்றனவோ? தீர்வொன்றையும் அறிவித்துவிட்டீர்களானால் இந்தியாவை வெல்லலாம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .