2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதலாம் தரத்துக்கான மாணவர் சேர்ப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான புதிய திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பப் பத்திரங்கள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

கடந்த காலங்களில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களில் காணப்பட்ட குளறுபடிகளை இல்லாதொழிக்கவே சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முன்னைய காலங்களில் நேர்முகத் தேர்வுக்கு கல்வியமைச்சர் அல்லது மாகாண கல்வியமைச்சரே தலைமை வகிப்பர். இம்முறை அது மாற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக பாடசாலை அதிபர்கள், உதவி அதிபர், அனுபவமிக்க ஆசிரியர்கள் ஆகியோரினால் இத்தேர்வினை மேற்கொள்ள முடியும் என்றார்.

மாணவர் தெரிவு தொடர்பில் ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றால் கல்வியமைச்சு பொறுப்பில்லை. அது தொடர்பாக பக்கத்திலுள்ள வேறு பாடசாலை அதிபர்களின் மூலம் கல்வியமைச்சில் மேன்முறையீடு செய்யலாம். இம்முறையானது நூறு வீதம் சரியானதெனக் கூறமுடியாது. குறுகிய காலத்தினுள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், இவ்வாறான முறையினை மேற்கொண்டுள்ளோம்.

ஆட்சியாளர்களோ, அரசாங்கமோ மாறும் போது தொடர்ந்தும் மாறாதிருக்கக் கூடிய வகையில் தேசியக் கல்விக் கொள்கையினை இன்னும் 3 அல்லது 4 மாதத்தினுள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.இவ்வாறு புதிய தேசியக் கல்விக்கொள்கையை உருவாக்குவதன் மூலம் பல பிரிவுகளில் கல்வி தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

முதலாம் தர மாணவர் அனுமதிக்காக விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் முடிவுத் திகதி ஜூன் மாதம் 30ஆம் திகதியாகும். இன்று முதல் விண்ணப்பங்களை அனுப்பலாம். செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் நேர்முகத் தேர்வும், செப்டெம்பர் 30ஆம் திகதி தற்காலிகப்பட்டியலும் வெளியிடப்படும். மேன்முறையீடு செய்வதற்கான இறுதித் திகதி ஒக்டோபர் 15ஆம் திகதியாகும்.

மேன்முறையீட்டு விசாரணைகள் ஒக்டோபர் 25ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும். இறுதியாக தெரிவானோர் விபரம் டிசம்பர் முதலாம் திகதி வெளியிடப்படுவதுடன், 2011ஆம் ஆண்டு முதல் வாரத்தினுள் புதிய வகுப்புகள் ஆரம்பமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .