2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் அவசர கடிதம்

Super User   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதயின் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பிய கடிதம் பின்வருமாறு:

கலைஞர் மு. கருணாநிதி
முதல்வர்,
தமிழ்நாடு

கலைஞர் அவர்களுக்கு


ஓர் அவசரக்கடிதம்!....

பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...

தமிழக மக்களின் முதல்வராகிய உங்கள் மீது ஈழத்தமிழ் மக்கள் தீராத பற்றுதலை கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழக மக்களின் அரசியல் சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கும் நீங்கள் மத்திய அரசிலும் பங்கெடுத்து தமிழக மக்களுக்கு சிறந்த வழிகாட்டலை
கொடுத்து வருவது கண்டு நாம் அகம் மகிழ்கின்றோம்.

நீங்கள் தேடிய இந்த வழிமுறையே ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்புடைய ஒன்று. ஆகவே கொள்கை வழியில் ஒன்று பட்டு நிற்கும் நான் உங்களோடு அவசரமும், அவசியமும் மிக்க விடயம் ஒன்றை மனந்திறந்து பேச விரும்புகின்றேன்.

தமிழகம் ஈழத்தமிழ் மக்களின் வேரடி மண்! தமிழக மீனவ மக்களுக்கும் ஈழத்தமிழ் மீனவ மக்களுக்கும் இடையில் கடற் பரப்பில் நிகழ்ந்து வரும் தகராறுகள் எமக்கு துயரங்களை தந்து கொண்டிருக்கின்றன.

கடல் எல்லை தாண்டி வந்து எம் தமிழக மீனவ உறவுகள் ஈழத் தமிழ் மீனவ மக்களின் கடற்பரப்பில் தொழில் செய்து வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு, வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும்  இது வரை வந்த முறைப்பாடுகள் குறித்து நீங்கள் அறிவீர்கள்.
 
இது குறித்து நான் தமிழக மீனவ சங்கங்களுக்கும் ஈழத்தமிழ் மீனவ மக்களின் சமாசங்களுக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்திருந்த தருணத்தில்...

பேசும் மொழியாலும், செய்யும் தொழிலாலும் ஒன்று பட்டு நிற்க வேண்டிய இரு தரப்பு உறவுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுப்பாலம் உடைந்து சிதறாமல் இருக்க நாம் முயன்று வரும் சூழலில்....

எம் காதில் விழுந்த செய்தி எமக்கு மிகுந்த மனவருத்தங்களைத் தந்திருந்தது. இலங்கை கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறப்படும் தமிழக மீனவ உறவுகளை பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருப்பதாக எமக்குத் தகவல் வந்தது.

தகவல் அறிந்த நான் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு நேரில் விஐயம் செய்திருந்தேன்! இலங்கை கடற்றொழிலாளர்களோடு இது விடயம் குறித்து விசாரித்த போது நடந்த சம்பவம் குறித்து எம்மிடம் எடுத்துரைத்தார்கள்.

கடந்த கால அழிவு யுத்தத்தின் போது தொழில் ரீதியாக பாதிப்படைந்திருந்த அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்களினால் அழிவு யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மறுபடியும் தாம் தமது கடற்டபரப்பில் தற்பொழுது சுதந்திரமாக தொழில் புரிந்து வருவதாகவும், ஆனாலும், இலங்கை கடற்பரப்பில் நுழையும் சில தமிழக மீனவர்களால் தமது கடல் வளங்களை அனுபவிக்க முடியாமல் இருப்பதாகவும் தமது மனத்துயரங்களை வழமை போல் என்னோடு பகிர்ந்து கொண்டனர்.

இதே வேளை தமிழக மீனவ உறவுகளோடு நான் பேசி அவர்களது நிலைமைகள் குறித்தும் அக்கறையோடு அறிந்து கொண்டேன். அப்போது தாம் இலங்கை கடல் எல்லை தாண்டி வந்ததன் தவறுகளுக்காக தாம் வருந்துவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

போலிஸாரின் காவலில் இருக்கும் தமிழக மீனவ மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பொலிஸாருடன் இணைந்து தாமும் கவனம் செலுத்துவதாக பருத்தித்துறை கடற்றொழிளார்கள் சம்மதம் தெரிவித்திருந்தமை எனக்கு பெரும் ஆறுதலை தந்திருந்தது.

இந்நிலையில் தமிழக மீனவ உறவுகள் விடுவிக்கப்பட்டு அவர்களை வீடு திரும்ப அனுமதிப்பதற்கான முயற்சிகளில் நான் தொடர்ந்தும் ஈடு பட்டு வருகின்றேன். எனது முயற்சிகள் வெற்றியளிக்கும் என்றும் நம்புகின்றேன்.

இதே வேளை கடல் எல்லைகளை தாண்டும் தவறான செயல்களை முழுமையாக தடுத்து நிறுத்துவதன் ஊடாக தமிழக மற்றும் இலங்கை மீனவ மக்களுக்கு இடையிலான தகராறுகளையும் தடுத்து நிறுத்தி நீடித்த நேச உறவுகளை வளர்க்கவும் முடியும் எனவும் நான் நம்புகின்றேன். இதற்கு தங்களின் ஒத்துழைப்பும் கட்டாய தேவையாகும்.

இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான நேச உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட நேரடியாகவே உங்கள் பிரதிநிதி ஒருவர் இங்கு அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

உங்கள் பிரதிநிதியாக ஒருவர் இங்கு வரும்போது இரு தரப்பு மீனவ மக்களும் பகைமை மறந்து பரஸ்பரம் புரிந்துணர்வோடு செயற்படுவதற்கான சூழல் ஒன்றை உருவாக்கும் இணக்கப்பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளராக நான் செயற்படுவேன் என்றும் உறுதியுடன் உங்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்விடயங்கள் குறித்து கௌரவ ராஐ;சபா உறுப்பினர் கனிமொழியுடனும் நான் தொடர்பு கொண்டு எடுத்து விளக்கியிருக்கின்றேன்.

ஈழத்தமிழ் உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் நீங்கள். அதே போல் தமிழக உறவுகளின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவன் நான்.

இரு தரப்பு உறவுகளும் இடையறாது நீடித்து நிலைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகவும்....

கடந்த கால அழிவு யுத்தத்தினால் துயரங்களை சுமந்து நின்ற ஈழத்தமிழ் மீனவ மக்களின் சார்பான மனிதாபிமான வேண்டுகோளாகவும்...

இம்மடலை உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்.

டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
செயலாளர் நாயகம்,
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி,
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .