2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

'சன் ஸீ கப்பல் குடியேற்றவாசிகளை தடுக்கும் வாய்ப்பை கனடா தவறவிட்டது'

Super User   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வருடம் சுமார் 500 இலங்கைத் தமிழர்களுடன் கனடாவை சென்றடைந்த எம்.வி. சன் ஸீ கப்பலை தடுத்த நிறுத்தக்கூடிய பல வாய்ப்புகளை கனடாவும் அதன் தோழமை நாடுகளும் தவறவிட்டிருந்ததாக கனடாவின் நெஷனல் போஸ்ட் பத்திரிகை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

மிகக் கிட்டிய வாய்ப்பு கடந்த வருடம் மே 9 ஆம் திகதி கிடைத்தது. எம்.வி. சன் ஸீ கப்பல் தாய்லாந்து வளைகுடாவில் இருப்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. ஆனால் தாய்லாந்து கடற்பரப்புக்கு அப்பால் அக்கப்பல் இருந்ததால் அக்கப்பல் செல்ல அனுமதிக்கப்பட்டது.

அதன்பின் மே மாத இறுதியில் கம்போடிய கடற்பரப்பில் அக்கப்பல் இயந்திரக் கோளாறுக்குள்ளானது. அவ்வேளையில் கம்போடியாவின் உதவியை கனடா கோரியது. எனினும் கம்போடிய அரசாங்கம் அக்கப்பலை தடுக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்ததாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரலாயம் கப்பல் பயணியொருவரிடமிருந்து பெக்ஸ் கடிதமொன்றை பெற்றதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் இக்கப்பல் கனடாவுக்கு சென்றுகொண்டிருப்பதாகவும் அது இயந்திர கோளாறுக்குள்ளானதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அக்கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த மேற்படி ஐ.நா. முகவரமைப்பினால் முடியவில்லை.

ஒழுங்கமைக்கப்பட்ட மனிதக் கடத்தல் வரலாற்றில் மிக மோசமாக இரகசியம் பேணப்பட்டதொன்றாக இக்கப்பல் இருக்கலாம்.

'ஆனால் இக்கப்பல் ஆபத்து மிக்க பசுபிக் சமுத்திரத்தை கடப்பதை தடுக்கும் பல வாய்ப்புகள் இழக்கப்பட்டன. குடியேற்றவாசிகள் சுரண்டப்பட்டு லாபமீட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க அரசாங்கங்களால் முடியாமல் போனதை இது விளக்குகிறது.

இக்கப்பல் சட்டக் கட்டுப்பாட்டுக்குரியது அல்ல எனத் தெரிந்த எமக்கு, அவுஸ்திரேலியாவுக்கு மற்றும் பலர இக்கப்பலை முற்றுகையிட்டிருக்கலாம்' என கனேடிய அதிகாரியொருவர் கூறியுள்ளார். தற்போதைய சட்ட வரையறைக்குள் எதையும் செய்வதற்கு அதிகாரமற்றிருப்பதாக அனைவரும் உணர்ந்தனர் என அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .