2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'வெள்ளைக்கொடி விவகார புலனாய்வாளர் உயர் நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டவர்'

Super User   / 2011 ஜூன் 08 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

வெள்ளைக் கொடி விவகார பிரதான புலனாய்வு அதிகாரியான அநுர டி சில்வா, அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டு 5000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது என உயர் நீதிமன்ற ஆவணக் காப்பாளர் ஆர்.ஏ.எஸ்.ஜி. ரணவக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.எம்.பி.பீ. வராவெவ, எம்.எஸ்.ரஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது உயர் நீதிமன்ற ஆவணக்காப்பாளர் ஆர்.ஏ.எஸ்.ஜி. ரணவக்க சாட்சிமளித்தார்.

அவர் பொன்சேகாவின் சட்டத்தரணியின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

தன்னை சித்திரவதை செய்ததன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக பிராமணகே அருண ஷெரோன் சுரங்க விஜேவர்தன என்பவர் தாக்கல் செய்த வழக்கில் அப்போது உப பொலிஸ் பரிசோதராக இருந்த அநுர டி சில்வா இரண்டாவது எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தார். 2002 ஆம் ஆண்டு இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் 533 / 2001 இலக்க வழக்குப் பதிவுகளின்படி அநுர டி சில்வா முதலாம் மறறும் மூன்றாம் எதிரிகளுடன் குற்றவாளியாக காணப்பட்டார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு சொந்தப் பணத்திலிருந்து 5000 ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு  முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது. 3 ஆம் எதிரியின் சொந்தப் பணத்திலிருந்து 3000 ரூபா வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, மேல் நீதிமன்ற பிரதிப் பதிவாளர் சமிகார பெரேரா சாட்சியமளிக்கையில், எச்.சி.3318ஃ6 ஆம் இலக்க வழக்கின்படி அநுர டி சில்வா சித்திரவதை தொடர்பாக 17.06.2006 ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டார்.

பிராமணகே அருண ஷெரோன் சுரங்க விஜேவர்தன சி.ஐ.டியினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அநுர டி சில்வாவினால் சித்திரவதை செய்யப்பட்டதாக 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதைச் சட்டத்தின்கீழ் அநுர டி சில்வாவினால குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

28.08.2010 ஆம் திகதி இக்குற்றச்சாட்டு சட்டமா அதிபரினால் வாபஸ் பெறப்பட்டது எனவும் அவர் கூறினார்.

வெள்ளைக்கொடி வழக்கில் வழக்குத் தொடுனர் தரப்பு வழக்குரைஞர் டி.எஸ்.ஜி. புவனேக அலுவிஹாவினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, குற்றஞ்சுமத்தப்பட்டவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் மேற்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக சமிகார பெரேரா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X