2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்தால் பேச்சுவார்த்தையிலிருந்து த.தே.கூ. வெளியேறும்

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

வடக்கு  - கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அரசாங்கம் நியமிக்குமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்ளும் என இன்று கூறியது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு உருப்படியாக எதையும் செய்யப்போவதில்லை என்றும் இது காலத்தை வீணே போக்குகின்ற ஒரு முயற்சி என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கங்களின் கீழ் அமைந்த பல்வேறு குழுக்களின் இறுதி அறிக்கைகள், சிபாரிசுகள் என்பன நிறைய உள்ளன. இவை இனப்பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டல்களாக அமைந்துள்ளன. அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வில் உண்மையான அக்கறையுடையதாயின் இவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிரேமசந்திரன் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ, மங்கள முனசிங்க குழுவை அமைத்தார். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு திட்டத்தின் அடிப்படையில் யாப்பு திருத்தங்களை செய்ய முயன்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிபுணர் குழுவை அமைத்தார். அதன்பின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவை (ஏபிஆர்சி) அமைத்தார். இந்த குழுக்கள் வடக்கு – கிழக்கு பிரச்சினையை நன்கு ஆராய்ந்து பல வகையான தீர்வுகளை முன்வைத்தன.

இந்த குழுக்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்களாக இருந்தபோதும் அவர்களின் அறிக்கைகளில் பல முற்போக்கான நல்ல தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என பிரேமசந்திரன் கூறினார்.

அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் (ஏபிஆர்சி) அறிக்கை பிரதான அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எட்டியிருந்தது. ஏ.பி.ஆர்.சி.யின் அறிக்கை பல நல்ல விடயங்களை கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் பங்குபற்றாத போதும், அரசாங்கம் ஏ.பி.ஆர்.சி.யின் எதிர்க்கட்சிகளின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்குமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஆராயும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த சிபாரிசுகள் பற்றி யோசிக்காத அரசாங்கம், யாரும் நினைக்காத வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஏன் கொண்டுவர வேண்டும்? யாருக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு தேவை? இதை யார் கேட்டார்கள்? இது அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவு. இதை த.தே.கூ. முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என அவர் கூறினார்.

கடந்த பெப்ரவரியிலிருந்து த.தே.கூ. அரசாங்கத்துடன் ஆறு சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஆனால் கிடைத்த பயன் சொற்பம் அல்லது எதுவுமில்லை என்றளவுக்கே உள்ளது.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 850 அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி கேட்டோம். இடம்பெயர்ந்தோருக்கான வசதிகள் பற்றி பேசினோம். எதுவுமே நடக்கவில்லை. அரசாங்கம் முக்கியமல்லாத, தேவையில்லாத விடயங்கள் பற்றியே பேசுகின்றது' என சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் கூறினார். (சந்துன் ஏ. ஜயசேகர)


You May Also Like

  Comments - 0

  • senthooran Thursday, 23 June 2011 12:04 AM

    ஒரே நகைசுவைதான் போங்கள் !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X