2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகளில் கவனம் செலுத்த உயர்மட்டக்குழு: பான் கீ மூன்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் பற்றிய ஐ.நா அறிக்கையை பெற்றுக்கொண்ட பான் கீ மூன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்காக உயர்மட்டக் குழுவொன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

'இதன்பின், ஏனைய நடவடிக்கைகளும் விரைவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித குலத்துக்கு மேலும் திறம்பட சேவையாற்ற அதிலும் குறிப்பாக மோதலில் சிக்குண்ட மக்களுக்கு சேவையாற்ற உள்ளக பரிசீலனைக்குழு தெரிவித்துள்ள விடயங்களிலிருந்து ஐ.நா கற்றுக்கொள்ள வேண்டுமென தான் உறுதியாக இருப்பதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

'இந்த விடயங்கள் சர்வதேச ரீதியான எமது வேலைக்கு பெரிதும் உதவ வல்லன. இதிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நல்ல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதிலும் விசேடமாக மோதலில் சிக்கிக்கொண்டு ஐ.நா.வின் உதவியை எதிர்ப்பார்க்கும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன்' என அவர் கூறியுள்ளார்.

2012இல் தனக்கு ஆலோசனை வழங்கவென செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு உள்ளக பரிசீலனை குழுவால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சிவிலியன்கள் முகங்கொடுத்த நிலைமைகளை ஐ.நா கையாண்ட விதம் உட்பட பல பிரச்சினைகளுக்குரிய விடயங்களை இந்த நிபுணர் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா.வின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு பணியாணையை செயற்படுத்துவது தொடர்பாக இலங்கை யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் ஐ.நா மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய முழுமையான விமர்சனத்தை அது வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் ஐ.நா.வின் உள்ளக பரிசோதனைக்குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை பெறப்பட்டது. இலங்கை யுத்தத்தின் பின் இது போன்ற யுத்தம் ஏற்படாதிருக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இக்குழுவின் அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம், 'இன்னும் கூடுதலாக செய்ய வேண்டுமென்பதில் நாம் தீர்க்கமாக உள்ளோம்' என கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .