2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பான் கீ மூன் - மஹிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது?: மனோ

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்  இணைந்து வெளியிட்ட ஐ.நா - இலங்கை அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில், பதின்மூன்றாம் திருத்தத்தை அமுலாக்குவதாகவும், தமிழ் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்றாம் திருத்தத்தை மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கை மூலம் உலக பொது மன்றத்தின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இன்று இதை அமுல் செய்து, பதின்மூன்றுக்கு மேலே செல்லாமல், இருப்பதையும் பறித்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? ஐ.நா சபையா? இலங்கை அரசாங்கமா?' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போண்து அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'2009, மே 19ஆம் திகதி கோரப்போரின் நிறைவை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவித்தார். அதன்போது நானும் சபையில் இருந்தேன். அதையடுத்து இலங்கைக்கு அவசர விஜயம் செய்த ஐ.நா செயலர் பான் கீ மூன், போர் நடந்த பகுதிகளை பார்வையிட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் ஊர் திரும்ப முன் 2009 மே 26ஆம் திகதி இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அத்துடன், இந்திய பிரதமருக்கு உறுதி அளித்தார், இந்திய ஊடகங்களுக்கு சொன்னார், தமிழ் தலைவர்களுக்கு சத்தியம் செய்தார் என்பதை எல்லாம் விடுங்களேன். உலகத்தின் அதி உயர் மாமன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில்தான், ஜானாதிபதி இதை சொல்லியுள்ளார். இந்நிலையில், இங்கே வந்து  நீங்கள்  பதின்மூன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என கூச்சல் எழுப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அரசியல் அமைப்பின் அங்கமான பதின்மூன்றாம் திருத்தம், இதே அரசியலமைப்புக்கு முரணானது என்று சொல்கிறீர்கள். அப்படியானால், இதை உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள். விமல் வீரவன்ச இது தொடர்பில் உயர் நீதிமன்றம் செல்வேன் என்று சொல்லி விட்டு பின் ஏன் பின்வாங்கினார்.

திவிநேகும சட்டமூலத்துக்கு நீதிமன்றம் சென்றதைப்போல, இதற்கும் நாம் தயாராகத்தான் இருந்தோம். நீங்கள் ஏன் நீதிமன்றத்துக்கு போகவில்லை? நீங்கள் இது தொடர்பில் வழக்குகள் போடுவீர்களானால் உங்கள் அரசாங்கத்துக்குத்தான் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கும். முடிந்தால் அதை செய்யுங்கள்.   

இந்த திருத்தம் இந்தியாவின் அழுத்தத்தால், அவசர, அவசரமாக கொண்டுவரப்பட்டது என சொல்கிறீர்கள். அழுத்தம் ஏற்பட நீங்கள் தமிழர்களை நடத்திய விதம்தான் காரணம். இன்றும் அதேதான் காரணம். இனிமேலும் அதுதான் நடக்கும். ஆனால், பதின்மூன்றும், மாகாணசபைகளும் அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்டன என சொல்லாதீர்கள். அது தவறு.

திம்பு பேச்சுவார்த்தை, பெங்களுர் பேச்சுவார்த்தை, உள்நாட்டில் அரசு-அன்றைய தமிழர் விடுதலை கூட்டணி பேச்சுவார்த்தைகள் என நடைபெற்றுதான் இந்த திருத்தம் அரசியலமைப்புக்குள் இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து உங்களுக்கு மொழி, மதம், கலை, கலாச்சாரம் எல்லாம்  வந்தது. அன்று விஜயனில் இருந்து இன்று ஷாருக்கான் வரை எல்லாம் இந்தியாத்தான். ஆனால், அங்கு நிலவுகின்ற மொழிவாரி மாநில ஆட்சிமுறையிலான  அதிகாரப்பிரிவினை மாத்திரம் வேண்டாம். நல்ல கதை இது.

அன்று 1987ல் இந்திய பிரதமர் ராஜீவ், ஜே.ஆர்.ஜெயவர்தனவை மிரட்டி பணியவைத்து பதின்மூன்றாம் திருத்தத்தை கொண்டு வந்தார் எனவும், அதேபோல் 2009இல், ஐ.நா செயலாளர் பான் கீ மூனும்  இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழுத்தம் கொடுத்து பணிய வைத்து இந்த கூட்டறிக்கையை வெளியிட வைத்தார் எனவும், எனக்கு முன் பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நண்பர் நிஷாந்த வணசிங்க சொல்கிறார்.

இது உங்களது வழமையான பல்லவி. ஆனால், இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கம் இல்லையா? இந்த நாட்டில், சிங்கள பௌத்த சகோதர இனத்து மக்களை தவிர வேறு எவரும் வாழமுடியாது என்றும், வாழ்ந்தால் அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்.

அதனால்தான், எந்தவித அதிகாரபிரிவினையையும் எதிர்க்கிறீர்கள். அதிகாரப்பிரிவினை என்ற கொள்கையை, இந்த நாட்டுக்கு அமெரிக்க  ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தவில்லை. 1987இல் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தவில்லை. அது 1940 களிலேயே கண்டிய சிங்கள தலைவர்களினாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப் பிரிவினையின் மூலமாக நாட்டுப்பிரிவினையை தவிர்ப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம். அதன்மூலம், சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை ஒன்று சேர்ப்போம்.

உலக சூழல் மாறி வருகிறது. உலகத்துக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு நீங்கள் இனிமேலும் தப்ப முடியாது. 2009 மே 26ஆம் கொழும்பில் வெளியிடப்பட்ட  பான்கிமூன் - மந்த கூட்டறிக்கையையும், அதில் தெளிவாக சொல்லப்பட்ட 'பதின்மூன்று அமுலாக்கப்படும்' என்ற விடயத்தையும், 'தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்று மேலும் அபிவிருத்தி செய்யப்படும்' என்பதையும் நாம் எமது போராட்டத்தின் மையகருத்தாகவும், பேசுபொருளாகவும்  உலகளவில் ஏற்படுத்துவோம்' என்றார்.                                      

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .