2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'இராணுவ ஆசிரியர்கள்' இராணுவ மயமாக்கலின் உச்சம் : மனோ

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம். இஙது நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற  சிபாரிசையே அப்பட்டமாக மீறுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனை உடனடியாக சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரவேண்டும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐநா அமைப்பின் கீழ் வரும் யுனேஸ்கோ என்ற ஐ.நா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக  ஆரம்பித்து இதுபற்றி தமது சர்வதேச ஆசிரிய அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கை இராணுவம் முதலில் எந்தவித சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் இல்லாமல் தமிழ்ப்பெண்களை இராணுவத்துக்கு சேர்த்தது. இப்போது வட மாகாண கல்வி அமைச்சு மூலமாக இந்த இராணுவ ஆசிரியர் செயல் முன்னெடுக்கப்படுகிறது.

தென்னிலங்கையில்

பாடசாலைகளில் சிங்கள மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை போதிக்க ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் இராணுவ ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், கல்வி போதிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் முன்னுக்கு பின் முரணாக தெரிவிப்பது  விசித்திரமானது.

தென்னிலங்கையிலும் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் இங்கு இராணுவ வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக பணிக்கு அமர்த்தப்படுவதில்லை.

தான்தோன்றித்தனமாக செயல்பட  முடியாது


ஆசிரியர் பற்றாக்குறை நிலவுமானால் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்வித்தகைமை மற்றும் பயிற்சி பெற்றுள்ளவர்கள் இருக்கின்றார்கள். நிறைய பட்டதாரிகள் தொழில் நியமனங்களுக்காக காத்திருக்கிறார்கள். பல்வேறு பாடாசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற பல ஆசிரியர்கள் உரிய நியமனங்களுக்காக காத்திருக்கின்றார்கள்.  இவற்றை கணக்கில் எடுக்காமல், பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஒரு காரணமாக கொண்டு பாடசாலைகளுக்குள் இராணுவ ஆசிரியர்களை கொண்டு செல்வது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.

கல்வித்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்குள் வருகிறது. வடக்கில் மாகாணசபை இல்லை என்ற காரணத்தால் முன்னாள் இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி சட்டத்தை தனது கையில் எடுத்துகொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார்.

இந்த நடவடிக்கையை மாகாணசபை அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியாது. மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படவும்  முடியாது.  உண்மையில் வடக்கில் மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் இது இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்காணிப்புகளின் கீழ் வருகிறது. 

கட்சி அரசியல் பேதங்கள் வேண்டாம்

எனவே, கிளிநொச்சி மாவட்டம் உள்வரும் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும், முல்லைத்தீவு  மாவட்டம் உள்வரும் வன்னி தேர்தல் மாவட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் இது தொடர்பாக கட்சி அரசியல் பேதங்கள் இல்லாமல் உடனடியாக  களமிறங்கி இந்த நடவடிக்கையை எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும்.

இராணுவத்தை திணிக்கிறது

உண்மையில் இந்த அரசாங்கம் கதை வசனம் எழுதி தயாரித்து சர்வதேசத்தில் திரையிட்ட கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சிபாரிசுகளையே இந்த நடவடிக்கை மீறுகிறது. அந்த அறிக்கையில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று குறைப்பதை விடுத்து இந்த அரசாங்கம் தமிழ் சமூகத்தின் அனைத்து அம்சங்களிளும் இராணுவத்தை திணிக்கிறது.

இதை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துமூலம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டும். அத்துடன்  அவர்கள் இதை உடனடியாக கொழும்பில் உள்ள ஐநா அமைப்பின் கீழ் வரும் யுனேஸ்கோ என்ற ஐ.நா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும் நான் கேட்டுகொள்கிறேன்.

அதேபோல் முல்லை, துணுக்காய், கிளிநொச்சி கல்வி வலயங்களில் நடைபெற ஆரம்பித்துள்ள இந்த சட்ட விரோத நடவடிக்கையை தொழில்ரீதியாக எதிர்த்து  இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும்  தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக  ஆரம்பிக்க வேண்டும் எனவும், இதுபற்றி ஆசிரிய தொழிற்சங்கங்கள் தமது சர்வதேச ஆசிரிய அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும்.

You May Also Like

  Comments - 0

  • AJ Saturday, 05 January 2013 10:49 AM

    ராணுவ அடக்கு முறை அடாவடி தனங்களின் உச்சம். இதற்கு எதிராக கட்சிகள் பாராது அனைத்து தமிழர் தலைமைகளும் தமிழ் சமூக அமைப்புகளும் மக்களும் ஓன்று சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து ஒரு கண்டன போராட்டம், சட்ட ரீதியான அணுகு முறை, வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சந்திப்பு, ஐநா மட்டும் மனித உரிமை மீறல்கள் தொடரபங்க அமைப்புகளுக்கு இது தொடரங்க அவங்களை அனுப்புதல் என்று சகல வேலைகளையும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் புலம்பெயர் எம் சொந்தங்களின் போராட்டங்களும் அந்த அந்த நாட்டில் நடை பெறவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X