2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எதிரணி கூட்டு நகைச்சுவை நாடகம்: பிரபா

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணி என்று சொல்லப்படுபவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூட்டணி நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதியாக தென்படுகிறது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்  குறிப்பிடுகையில்,

"எதிரணி கூட்டணியில் கைச்சாத்திட்டவர்களில் ஐக்கிய தேசிய கட்சியை தவிர நாடாளுமன்றத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தும் எந்தக் கட்சியும் கிடையாது. வெறும் இரண்டு நான்கு பேர் அங்கம் வகிக்கும் கட்சிகளைத் தான் ஐக்கிய தேசிய கட்சி எதிரணி கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியையும் ஜனநாயக மக்கள் முன்னணியையும் தவிர ஏனைய கட்சிகள் அரசியல் வங்குரோத்து நிலையிலுள்ள கட்சிகளாகும். இந்த கட்சிகளை கூட்டணிக்குள் வைத்துக் கொண்டு மாபெரும் சக்தியாக விளங்கும் அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது நகைச்சுவை நாடகத்தின் ஆரம்பப் பகுதியை பார்ப்பது போலுள்ளது.

மேடையில் கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது கடந்த ஜனாதிபதி தேர்தல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த தேர்தலிலும் கைகளை உயர்த்தி பிடித்து படுதோல்வியை தழுவினர் என்பதையும் மறந்து விடக்கூடாது. தமிழ் கூட்டமைப்பினர் இதில் கையெழுத்திட மறுத்தமை வரவேற்கத்தக்கது. இதில் கையெழுத்திடுவதன் மூலமாக தனது தனித்துவத்தையும் இலட்சியங்களையும் அவர்கள் கைவிட தயார் இல்லை என்பது புரிகிறது.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது மட்டுமின்றி சந்திரிக்கா அம்மையார் தமது தரப்பிலிருந்து தமிழ் மக்களுக்கான தீர்வினை கொண்டு வந்தபொழுது தீர்வின் பிரதிகளை நாடாளுமன்றத்தில் எரித்தது ஐக்கிய தேசிய கட்சி என்பதனையும் அவர்கள் மறந்து விடக்கூடாது.

எதிரணி கூட்டணி என்பதற்குள் குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. மற்றும் சரத் பொன்சேகா தலைமையிலான கட்சிகளைக் கூட உள்வாங்க முடியாத நிலையில் இன்று ரணில் விக்கிரமசிங்க தள்ளாடிப் போயிருக்கின்றார்.

இப்படியான கூட்டணியை அமைத்து அரசாங்கத்திற்கு சாதகமான போக்கையே அவர் ஏற்படுத்துகின்றார். யாழ்ப்பானத்தில் 15ஆம் திகதி நடக்கவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு மிச்சம் மீதமிருக்கும் சிங்கள வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காமல் போக வழிபன்னும் எதிர்கட்சி தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்க் கூட்டமைப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியும் தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பும் தமிழ் தீவிரவாத அறிக்கைகள் ஒன்று விடாமல் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள பத்திரிகைகள் ஊடாக சிங்கள மக்களுக்கு பரைசாற்றப்படுகின்றது.

இதன் மூலமாக இன்று எமது அரசாங்கத்திற்கு மேலதிகமான சிங்கள வாக்குகள் கிடைக்கப் பெறுகின்றன. இப்படியாக தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழ் தீவிரவாதம் பேசும் கட்சிகள் இன்றைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையே பெற்றுக் கொடுக்கின்றனர்.

அதனால் தானோ இவ்விரு கட்சி தலைவர்களின் பிறந்த நாளுக்கு கூட மிகவும் கரிசனமாக ஜனாதிபதி இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார் என நினைக்கின்றேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .