2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசுடன் மு.கா இணைவது கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்காது: பஷீர்

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
வட மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்த விதப்  பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் உற்பத்தி வள ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தான் போட்டியிட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியையும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுத்தருவோம் என்றும் அன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது

ஆனால். வடமாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிட வருமாறு எவ்வித பகிரங்கக் கோரிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுவரை விடுக்கவில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, வடமாகாணத்தில் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுக் கரம் அவசியமில்லை என்ற கணிப்பீடே இதற்கான காரணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"மற்றைய இரு மாகாண சபை தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்துக்கும் எவ்வித நட்டமும் ஏற்படப் போவதில்லை. இந்த அடிப்படையில்தான், தமிழ்த் தேசிய சக்திக்கும் அரசுக்கும் முன்னிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நடுவுநிலைப் பாத்திரத்தை நான் விளங்கிக்கொண்டேன். அந்த வகையிலேயே வடக்கில் அரசுடன் இணைந்து போடடியிடுவது பொறுத்தமானது என நம்பினேன்" என்றார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணத்தில் அரசுடன் இணைந்தும், ஏனைய இரு மாகாணங்களில் தனித்தும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

ஆரேக்கியமானது

ஒரு கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கும் சகலரும் எப்போதும் ஒரு விடயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒரு விடயத்தில் பல கருத்துக்கள் கட்சிக்குள் இருப்பது என்பது ஜனநாயகத்  தன்மை வாய்ந்தது அதுவே, ஆரேக்கியமானது என்று நோக்கப்படும்; என்று நம்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி;ரஸ் அதியுயர் பீட உறுப்பினர்களில் பலர் மேற்படி எனது கருத்துக்கு சமமான கருத்துடனேயே இருந்தனர்.

எனினும்,இறுதியில் வட மாகாண சபைத் தேர்தலில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுவது என்றே முடிவாகியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்ற வகையில் இந்த முடிவுக்கு கட்டுப்படும் கடப்பாடு எனக்கு இருப்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டவனாக வட மாகாண சபை தேர்தலின் போது அரசுடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என நான் எண்ணம் கொண்டிருந்தமைக்கான காரணங்களை மக்;களுக்குத்  தெரியப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

கூட்டமைப்பை பாதிக்காது

கட்சியின் பாதுகாப்பு, முன்னேற்றம் கருதிய விடயங்களே காரணங்களாக அமைவதை சகலரும் புரிந்து கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். வடமாகாணத்தில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம், இன்னுமொரு  சிறுபான்மை  இனமான  தமிழ்  மக்களின், பெரும்பான்மை  ஆதரவை  பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்த விதப்  பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றே நம்புகின்றேன்.

வட மாகாண சபைத்தேர்தலில் இணைந்து போட்டியிடவருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுவரை விடுக்கவில்லை.  இந்நிலையில், வடக்கில் அரசுடன் இணைந்து போட்டியிடுவது பொறுத்தமானது என நம்பினேன். முக்கியமான தேர்தல்கள் அனைத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவே போட்டிக்கு நின்றதால், இதுவரை இரு தரப்புக்குமான உறவு, உறுதிப்படவே இல்லை என்பதே அனுபவமாகும்.

மு.க.வின் முயற்சிகள் தோல்வி

அதுமட்டுமன்றி 2005ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்ப்பு அரசியலுக்கும் - ஆளும் கட்சி அரசியலுக்கும் இடையில் ஒரு பாதையைப் போட மு.கா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. எனவே வடமாகாண சபைத் தேர்தல் தருணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தப் பயன்படுத்த முடியும் எனவும் நம்பினேன்.

மதிப்பளிக்க வேண்டியுமிருந்தது

வட மாகாணத்தில ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் அரசுடன் இணைந்து   போட்டியிடுவதை விரும்பியதால் அந்த ஜனநாயக விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டியுமிருந்தது.

அத்துடன், இத்தருணத்தை பயன்படுத்தி, நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களை அனுபவித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளித்துவரும் மக்களுக்கு, விசேடமாக இளைஞர் யுவதிகளுக்கு விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், அரச சிற்றூழியர் முதலான அரச தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மையளிக்க முடியும் என்ற நம்பிக்கையிருந்தது.

அதே நேரம், அரசின் பங்காளியாக மு.கா. இருந்த போதும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், தம் மக்களுக்கான எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் இவ்விடயங்களையும் இத்தருணத்தில் அரசைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புமிருந்தது.

வடக்கில் இணைந்தா-தனித்தா

வடக்கு தேர்தலில் இணைந்தா-தனித்தா போட்டியிடுவது என்ற பெரும்பான்மை கருத்துக்கும், சிறுபான்மைக் கருத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் நிலவுகின்றமையால், வடமாகாணத்தில் எமது கட்சியின் அமைப்பை ஒன்றாகவே வைத்திருக்க வேண்டும் என்ற அவசியத்தை நான் உணர்ந்தேன்.

கட்சியே, அரசுடன் இணைந்து வடக்கில் போட்டியிடுவது என்று முடிவு எடுப்பதன் மூலம் கருத்து வேறுபாடுகள், பிரிவினைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் எனக்  கருதினேன். அதே நேரம் 2010ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்தியில் அரசாங்கத்துடன் இணைந்தபோது "கட்சியை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இணைகின்றேன்" என்று நமது தேசியத் தலைவர் பகிரங்கமாக தெரிவித்தமையும் இங்கு நினைவூட்டுகிறேன். 

மு.கா.வை ஐ.ம.சு.மு பிரிக்கவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இணைந்த பின்னர் தேர்தலில் நமது கட்சி தனித்து போட்டியிட்ட போதும், மு.கா. பிரமுகர்கள் எவரையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரித்து எடுத்து தனது வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை.

இவ்வாறே மு.காவும் ஐ.ம.சு. முன்னணியில் இருந்து எவரையும் பிரித்து எடுக்காதவாறானதொரு பரஸ்பர இணக்கம் அன்று இருந்தது. ஆனால் இம்முறை புத்தளத்தில் இருந்து எமது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஹியா ஆப்தீனை ஐ.ம.சு.மு. வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான பாதகமான சமிக்ஞைகள் தோன்றுவது கட்சிக்கு ஆபத்தானது. இணைந்து போட்டியிட முடிந்திருந்தால் இவ்வாபத்தையும்  தடுக்க முடிந்திருக்கும்.

கட்சிக்கு ஆபத்து

அதுமட்டுமன்றி ஐ.தே.கட்சியின் பிளவையும் அதன் சில உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் முன்பே ஊகித்திருந்தேன். இடதுசாரிகளுடன் சமரசத்துக்கு வந்தும், ஐ.தே.கட்சியில் இருந்து இன்னும் சில உறுப்பினர்களைத் தம்வசம் திருப்பி எடுத்தும், ஸ்ரீ.ல.மு.காவின் ஆதரவு இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும் வாய்ப்பு அரசாங்கத்துக்கு இருப்பது நமது கட்சியின் அரசியலுக்கு மற்றுமொரு ஆபத்தாகும் என்பதையும் கவனத்தில் கொண்டிருந்தேன். 

அது மாத்திரமன்றி ஐ.தே.க உறுப்பினர்களின் அரசுடனான இணைவினால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மு.கா.வுக்கு இருக்கும் பேரம் பேசும் சக்தி இல்லாது போகும் நிலையேற்படும் என்பதையும் கவனத்தில் கொண்டிருந்தேன்.
இணக்கப்பாட்டு அரசியலை அவசியமானதாகும்.

மு.கா.வுக்கு இருக்கும் ஒட்டுமொத்த வாக்கு வங்கியை விடவும் ஐ.தே.க.வில் இருந்து பிரித்து எடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிங்கள வாக்குகளின் தொகை அதிகமானதாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆகவே நமது கட்சி சரியாக ஒரு வியூகம் வகுக்கும் வரை அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன்.

மு.கா மீது அதிருப்தியில்

ஸ்ரீ.ல.மு.கா 18ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு அளித்தமையினால் தான், முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசாங்கத்தில் உள்ள இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வாங்கி இறுதியில் அவர்களும் அச்சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு மேலும் திருத்தம் கொண்டுவர முற்பட்டபோது அதனையும் மு.கா வன்மையாக எதிர்த்ததன் காரணமாக ஏற்பட்ட நம்பிக்கையிலேயே இடதுசாரிகளும் இதனை எதிர்க்கத் தலைப்பட்டனர். இதன் காரணமாக அரசு தற்போது மு.கா மீது அதிருப்தியில் இருக்கிறது. 

ஒன்றில் அரசில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும்; அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் பிளவுபட வேண்டும் என்று விரும்புகின்ற சக்திகள் இருக்கின்றன. இந்த சக்திகள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தலைமைத்துவத்துக்கும் - அரசுக்கும் இடையில் பாரிய இடைவெளியைத்  தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.

அதேவேளை அண்மையில் இலங்கை வந்த ஒரு வெளிநாட்டு உயர் பிரமுகருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, கிழக்கு மாகாண ஆட்சியை குழப்பும் வகையில், தேவை ஏற்படின் மு.கா மாகாண சபை உறுப்பினர்களின் அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்ற உத்தரவாதம் அவரிடம் வழங்கப்பட்டதாக அரசாங்கத்தின் உயர் மட்ட முக்கியஸ்தர்களிடம் இச்சக்திகளினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சந்தேகப்படுகிறேன்

அதுமட்டுமின்றி புதுடில்லியில் ஸ்ரீ.ல.மு.காவும் இந்திய அரசின் முக்கியஸ்தர்களும் இரகசியமாக சந்தித்து பேசியதாகவும் இதே சக்திகளால் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எது எவ்வாறாயினும் இவ்விடயங்களை அரசு நம்புவதனால், ஸ்ரீ.ல.மு.காவின் ஆதரவு தேவைப்படாத மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாகாணசபை உறுப்பினர்கள் கட்சி மாறத்தக்க வகையில் அரசியலமைப்பு யாப்பில் திருத்தம் கொண்டு வரப்படக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்.

இவ்வாறான சூழ்நிலையில் மு.கா தலைமைத்துவத்தின் மீது ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நம்பிக்கை வரும் வகையில் வடமாகாணசபையில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் அவசியம் இருப்பதாக தெரிந்தது.

சமூகத்திற்கு கேடாக முடியக்கூடும் 

பொதுபலசேனா, சிங்களராவய முதலான பெரும்பான்மையின தீவிர சக்திகளின் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான நடடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தனித்த முஸ்லிம் மேடைகளில் இந்த ஆபத்தான சக்திகளுக்கு எதிராக, வெறும் தேர்தல் நோக்கம் கொண்ட பிரச்சாரங்களையும் எதிர்ப்புகளையும் முன்னெடுப்பது சமூகத்திற்கு கேடாக முடியக்கூடும் என நான் கருதுவதால் இக்கேட்டிலிருந்து விடுபட, வடமாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை விட, அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் அரசின் நீல மேடைகளில் அதன் பாதுகாப்பிலும் அனுசரணையிலும் இருந்தபடியே அச்சக்திகளுக்கு எதிரான எமது பிரச்சாரங்களையும் எதிர்ப்புகளையும் முன்னெடுக்க முடியும் எனவும் இதன் மூலம் இத்தீவிர சக்திகளில் இருந்து எமது சமூகத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் நான் திடமாக நம்பினேன்.

எமது கட்சிக்குச் சார்பாக அமையும்

ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை விட வடமாகாண சபைத் தேர்தலை உள்ளும் புறமும் பலரும் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் வடமாகாண  நீல மேடைகளில் எம்மால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களும், நடவடிக்கைகளும் தாமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடக் கூடிய ஏனைய இரு மாகாணங்களுக்கும் பொசிந்து சென்று விடுவதால் அவ்வந்த மாகாண சபைத் தேர்தல்களின் போது இது எமது கட்சிக்குச் சார்பாக அமையும் எனவும் நம்பினேன்.

நமது கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாகவும், அதே நேரம் கட்சி முன்னேற்றத்திற்கும், பாதுகாப்புக்கும் உகந்தது என்று நான் நம்பியதன் காரணமாகவும் அரசுடன்  இணைந்து வடமாகாணத்தில்  மட்டுமாவது போட்டியிடுவது நல்லதென நான் தெரிவித்த கருத்தில் உள்நோக்கங்கள் எதுவுமில்லை என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்".  

You May Also Like

  Comments - 0

  • mooniyamma Monday, 29 July 2013 09:24 AM

    இப்படிதான் சொல்லுறது பின்னாடி போய் ஒட்டிகொள்ளுறது. நீங்கெல்லாம் திருந்தாம விமோசனம் கிடையாது... கடவுள் நிச்சயம் உங்களை கேட்பான்...

    Reply : 0       0

    amafareed Monday, 29 July 2013 09:53 AM

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டால் நிச்சயமாக தமிழ் கூட்டமைப்பு வெற்றி பெறும். காரணம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் ஐ.தே.கட்சி முஸ்லிம்களும் கட்டாயம் வாக்களிப்பார்...

    Reply : 0       0

    vaarisu. Monday, 29 July 2013 04:43 PM

    மந்திரி ஐயா... அப்ப வடக்கில் ததேகூ வெல்லும் என்று சொல்லுறீங்கோ இல்லையா? நம்புட கண்டன காங்கிரஸு என்னத்த பேரம் பேசி நம்புட மக்களுக்கு என்னத்த செஞ்சிருக்காங்கோ...?ஒங்களுக்கு எத்தன மந்திரி பதவி தேவை இதுதானா ஒங்கட பேரம். அரசுடன் சேர்ந்து இதுவரை ஏதாவது ஓர் உருப்படியான வேலை ஒங்கட அந்த காங்கிரஸு செய்துள்ளதா? தயவு செய்து முஸ்லிம் மக்களை கறி வேப்பிலையாக பாவிக்காதீங்கோ? நன்றி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X