-நா.நவரத்தினராசா
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான மண்டபங்களின் பாதுகாப்பு கடந்த காலங்களைவிட இம்முறை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வித்திணைக்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த காலத்தில் பரீட்சை மண்டபங்கள் மற்றும் வினாத்தாள்கள் வைத்திருக்கும் பாடசாலைகளுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர். இம்முறை கடந்த காலங்களைப் போலல்லாது பரிட்சைத் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.
பரிட்சை நடைபெறும் நாட்களில் குறிப்பாக ஒரு மாத காலத்திற்கு பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்ல முடியாது என்பதுடன் பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என யாரும் பரீட்சை நடைபெறும் வேளையில் வெளியால் செல்ல முடியாது எனவும் அப்படி யாராவது சென்றால் பொலிஸார் அத்தகையவர்களை கைதுசெய்யவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்கள் நடத்துதல், விளையாட்டுக்களை நடத்துதல், போட்டிகளை நடத்துதல் என எந்த வகையான செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாதென பரீட்சைத் திணைக்களத்தினால் அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்கள், பணிப்பாளா்கள் அனைவருக்கும் இது சம்பந்தமான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.