2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கதிர்காமரின் மகனின் மனு; பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ். செல்வநாயகம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு; மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச்சொத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அவரது மகன் ஆணை கோரும் மனுவொன்றையே அவர் கடந்த முதலாம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் இந்த மனுமீதான விசாரணையை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.சிறிஸ்கந்தராஜா, நீதியரசர் டப்ளியு.எம்.மலினி குணரத்ன ஆகியோர் முன்னிலையிலேயே ஆராயப்பட்டது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி வெலியமுன ஆஜராகியிருந்தார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக 1995 ஆம் ஆண்டு கடமையாற்றிய முறைப்பாட்டாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் எஸ்.ஜே. கிறிஸ்ரியன் கதிர்காமரே மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடற்படையைச்சேர்ந்த அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர், இலங்கை இராணுவத்தின் மேஜர் செல்வநாதன் கதிர்காமநாதர், பிரபல இராணி சட்டத்தரணி சாம் கதிர்காமர் ஆகியோர் தனது நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறியுள்ளார்.

தனது மூதாதையர் வழி சொத்தான இந்த காணி, ஆழ்வார் மலையடி மாவிட்டபுரத்தில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது நிலம் பொது தேவைக்காக தேவைப்படுவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால், இதற்கான காரணம் பாதுகாப்பு படையணி தலைமையகம் அமைத்தல் என கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பாதுகாப்பு படை 6381 ஏக்கர் காணிகளை பிடித்து வைத்திருப்பதாகவும்  அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணியை பொறுப்பேற்கும் அறிவித்தல்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் வரவில்லை என்பதையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது முதுசமான காணியை பிரதிவாதி பொறுப்பேற்பதை தடைச்செய்யும் தடையுத்தரவை ஒன்றை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .