2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிபுணர் குழுவிடம் இராணுவத்தினர் சாட்சி? இலங்கை இராணுவம் மறுப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிட்டதன் பிரகாரம், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன்னிலையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலரும் சாட்சியமளிக்கவுள்ளதாக நம்பகரமான இராஜதந்திர வட்டார செய்தி தெரிவிக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் இடம்பெற்ற காலத்தில், படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலரே இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசு தலைமையுடன் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அடுத்து இந்த அதிகாரிகள், நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளில் நிரந்தரமாக வாழ்ந்துவருகின்றனர்.

அவர்களில் குறைந்தது மூன்று அதிகாரிகளின் சாட்சியங்களை மேற்கு நாடுகள் சில ஏற்கனவே பதிந்து வைத்திருக்கின்றன என்றும், மேற்கு நாடுகளின் தொழில்நுட்ப சான்றுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களுடன் அந்த சாட்சியங்கள் சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் முன்னால் வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்படும் என்றும் அந்த இராஜதந்திரமட்ட செய்தி மேலும் தெரிவிக்கிறது.

சாட்சியமளிக்கத் தயாராக இருப்பவர்களுள் ஒருவர் இராணுவத்தின் மிக உயர்ந்த தர நிலையில் பதவி வகித்த, பௌத்தத்தைச் சாராத பிற மதம் ஒன்றைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. அத்தோடு, சில சாட்சிகளை ஏற்கெனவே பதிவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக எவரேனும் செயற்பட்டால், அதற்கெதிராக எங்கும் தான் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நிபுணர் குழுவிடம் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளமையை முற்றாக மறுக்கின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

இலங்கைக்கும் அதன் பாதுகாப்பு படைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்த சர்வதேசம் முயற்சித்து வருகிறது. இதுவொன்றும் புதுவிடயமல்ல. இல்லாத ஒரு விடயத்திற்கு எவர் வந்து சாட்சி சொன்னால்தான் என்ன? முதலில், நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்நிலையில், அந்த நிபுணர் குழுவிற்கு சாட்சி என்பது வேடிக்கையாகவிருக்கிறது.

பொய்யான சாட்சிகளை எவர் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நடைபெறாத ஒரு செயலுக்காக பொய் சாட்சியங்களை உருவாக்க சர்வதேசம் முயற்சிக்கிறது. இதற்கு உண்மையான படையினர் எவரும் பலியாகமாட்டார்கள் என்று பிரிகேடியர் ருவான் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .