2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம்: இன்று தீர்ப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை  தீர்ப்பு அளிக்கவுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கவுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது தாமதமாக மத்திய அரசு முடிவு எடுத்ததாகக் கூறி, அவர்களுக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் சிறை தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரியில் தீர்ப்பளித்தது.

அதில், 'சிறை விதிகளுக்கு உள்பட்டு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத் தீர்ப்பின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால், தமிழக அரசின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

அம் மனு மீது கடந்த மாதம் விசாரணை நடந்த போது, 'ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களை மத்திய அரசு அனுமதி பெறாமல் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது' என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, 'பயங்கரவாத வழக்கு என்பதால் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கருத்தையோ, யோசனையையோ மாநில அரசு கேட்கலாம்.  ஆனால், மத்திய அரசின் உத்தரவின்படிதான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் வாதம் தவறு என்று தமிழக அரசு சார்பிலும், கைதிகள் சார்பிலும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை அளிக்கப்படவுள்ளது.

இத் தீர்ப்பை வழங்கும் நாளில்தான் தலைமை நீதிபதி பதவியில் இருந்து சதாசிவம் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .