2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாங்கறியாதவனின் திட்டம் எப்படி: ஜனாதிபதி

Thipaan   / 2014 ஒக்டோபர் 24 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதுடன் மக்களின் மனங்களை கவரும் வகையில் நிவாரண பொதியுடன் கூடிய யோசனைகளை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை 1.30க்கு கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 1.30க்கு அவைக்குள் பிரவேசித்தார்.

சம்பிரதாயபூர்வமான வரவு-செலவுத்திட்ட பெட்டியை இம்முறையும் எடுத்துவராத நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோவையுடன் அவைக்குள் பிரவேசித்தார்.

அப்போது அவையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். எதிரணியினர் தங்களுடைய ஆசனங்களிலேயே அமர்ந்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 10ஆவது வரவு-செலவுத்திட்டத்தின் முதலாவது பகுதியில், கடந்த கால செயற்பாடுகளை எடுத்தியம்பிய ஜனாதிபதி, நாட்டில் புரையோடிபோயுள்ள பிரச்சினைகளுக்கு நாட்டுக்குள்ளேயே தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் வெளிநாட்டு தலையீடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைந்து கொண்டு பிரச்சினைக்கு தீர்வு ஒத்துழைக்கவேண்டும் என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறும் கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, கிராம அபிவிருத்தியை புகழ்ந்த ஜனாதிபதி, அவற்றை காட்டு யானைகள் துவம்சம் செய்வதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இதன்போது எதிரணியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள், அரசாங்கத்தை அச்சுறுத்தும் யானைகள் இருப்பதாக கூறினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த ஜனாதிபதி, அரசாங்கத்தை அச்சுறுத்தும் யானைகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று சிரித்து கொண்டே கூறினார்.

இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது. அந்த சிரிப்பொலிக்கு மத்தியில் உரையை தொடர்ந்த ஜனாதிபதி, வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது பகுதியை வாசிப்பதற்கு முன்னர் இது முக்கியமான பகுதியென்றும் கவனமாக செவிமடுக்கவும் என்றும் எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவது பகுதியில், நிவாரணங்கள், முன்மொழிவுகள், சம்பள அதிகரிப்புகள், வரி குறைப்புகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் அடங்கிய முன்மொழிவுகளை வைத்தபோது ஆளும் கட்சியினர் மேசைகளில் தட்டி ஆரவாரம் செய்தனர்.

வரவு-செலவுத்திட்டத்தை சுமார் மூன்று மணிநேரம் இடைவிடாது வாசித்த ஜனாதிபதி, மாலை 4.32க்கு உரையை நிறைவுசெய்துவிட்டு எதிரணியை பார்த்து பாங்கறியாதவனின் திட்டம் எப்படி என்று வினவிட்டு சபையிலிருந்து வெளியேறிவிட்டார்.

இதனையடுத்து அவைத்தலைவரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா சபையை இன்று 25ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிவரையும் ஒத்திவைத்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .